கர்நாடகாவில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் வீடு புகுந்து வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் தார்வாடில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளராக இருந்தவர் பைரோஸ் பதான் (32). இவருக்கு இன்னும் 2 வாரங்களில் திருமணம் நடைபெறவிருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் தார்வாடின் மலப்புரம் பகுதியில் உள்ள பைரோஸ் பதானின் வீட்டுக்குள் புகுந்த மூன்று அல்லது நான்கு பேர் கொண்ட மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டியது.
படுகாயமடைந்த பைரோஸ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வீட்டிற்கு வெளியே இருந்த பைரோஸை அவர்கள் தாக்க முயன்றபோது அவர் உள்ளே சென்று கதவை மூடி தப்பிக்க முயன்றுள்ளார். அந்த கும்பல் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து அவரை வெட்டிக் கொன்றது என குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அவர்களைத் தடுக்க முயன்றபோது பைரோசின் தாயும் சகோதரியும் தாக்கப்பட்டனர்.
வீட்டருகே உள்ள சிசிடிவி காட்சிகளில், அந்த கும்பலில் இருந்த ஒரு குற்றவாளி குறித்த முக்கிய தடயங்கள் காவல்துறைக்குக் கிடைத்துள்ளன.
வீட்டிற்குள் புகுந்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் நன்கு திட்டமிடப்பட்டதாக காவல்துறை சந்தேகிக்கிறது.
இந்தக் கொலைக்குப் பின்னால் அரசியல் விரோதமா அல்லது தனிப்பட்ட காரணங்களா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
குற்றவாளிகளை கைது செய்ய சிறப்புக்குழு அமைக்கப்ட்டுள்ளதாக நகர காவல் ஆணையர் என். சசிகுமார் தெரிவித்தார்.
திருமணத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு பைரோஸின் எதிர்பாராத மரணம், அவரது குடும்பத்தினரையும் உள்ளூர் காங்கிரஸ் தொண்டர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
