இவ்வளவு நிதி பற்றாக்குறையை வைத்துக்கொண்டு இலவசம் கொடுப்பதா: சீமான் கேள்வி

திருச்சி: ”மாற்றத்தை விரும்பும் மக்களுக்கான மாநாடு வரும் 21ல் திருச்சியில் நடைபெறுகிறது. இந்த மாநாடு தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். இவ்வளவு நிதி பற்றாக்குறையை வைத்துக்கொண்டு இலவசம் கொடுப்பதா” என அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் வரும் 21ம் தேதி நடைபெறும் நாதக மாநாட்டில், அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்த உள்ளார். இது குறித்து நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: வரும் 21ம் தேதி நடைபெறும் நாம் தமிழர் கட்சி மாநாடு தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். மக்கள் அரசியலில் மாற்றத்தை விரும்புகிறார்கள். சுற்றுச்சூழல் பாதிப்பு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. மாற்றம் என்பது சொல் அல்ல; செயல். தேர்தல் பிரசாரத்தை நாம் தமிழர் கட்சி தொடங்கிவிட்டது.

ஆட்சி முறை மாற்றம்

வேட்பாளரை மொத்தமாக அறிவித்துவிட்டு, தேர்தல் பிரசாரத்தை முழுவீச்சில் தொடங்குவோம். நாங்கள் விரும்புவது ஆட்சி முறை மாற்றம். இந்த ஆட்சி முறை அரசியலை எதிர்க்கிறோம். தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் கடன் வாங்கி நிறைவேற்றப்பட்டவை. கடன் பெற்று திட்டத்தை அரசு நிறைவேற்றுகிறது. அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் தரமில்லை. எல்லாம் இலவசமாக கொடுக்கிறார்கள். அறிவை வளர்க்கும் ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் வீதியில் நிற்கிறார்கள். நெசவாளிகள் வீதியில் நிற்கிறான்.

குவாட்டர் இலவசம்

நீங்கள் குவாட்டர் இலவசம் என்று கடையில் விற்பனை செய்வீர்களா? பண்டிகைக்கு 10 குவாட்டர் இலவசம் என்று அரசு சொல்கிறதா? விசாயிகள் கஷ்டப்பட்டு விளைவிக்கும் அரிசியை மட்டும் இலவசம் என்று ஏன் இந்த அரசு அறிவிக்கிறது. பொங்கலுக்கு நெசவாளர்கள் கஷ்டப்பட்டு தயார் செய்யும் வேஷ்டி, சேலைகளை இலவசமாக கொடுக்கும் அரசு, 10 குவாட்டர்களை இலவசமாக கொடுக்குமா? இலவசமாக ஏதை கொடுக்க வேண்டும் என்று இருக்கிறது. அறிவு, மருத்துவத்தை உலக தரத்திற்கு கொடுங்கள்.

தரமில்லை

அமைச்சர்கள், பார்லிமென்ட் எம்பிக்கள், சட்டசபை எம்எல்ஏக்களில் யாருடைய பிள்ளை அரசு கல்லூரிகளில் படிக்கிறது? ஏன் படிக்கவில்லை என்றால் தரமில்லை. ஆயிரம் ரூபாய் கொடுங்கள், தேர்தல் வரும் போது திடீரென 5 ஆயிரம் ரூபாய் கொடுங்கள். கோடை நேரம் வரும் கை செலவுக்கு காசு இருக்காது, 2 ஆயிரம் ரூபாய் போட்டு கொடுங்கள் என்று நாங்கள் கேட்கவில்லை. இவ்வளவு நிதி நிலை பற்றாக்குறையை வைத்து கொண்டு இலவசமாக கொடுப்பதா? இவ்வாறு சீமான் கூறினார்.

Source link