இஸ்ரேலின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் தாக்குதல்

உலகின் மிகப்பெரிய எரிவாயு வயலான தெற்கு பார்ஸ் ஈரானின் உள்நாட்டுத் தேவைகளுக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதன் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேலின் எரிசக்தித் தேவையில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹைஃபா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஈரான் தாக்கியுள்ளது. வியாழக்கிழமை (மார்ச் 19) நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், பாலிஸ்டிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. தாக்குதலைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் கரும்புகை சூழ்ந்ததோடு, மின் இணைப்புகளும் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டன.

தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் எரிசக்தித் துறை அமைச்சர் ஏலி கோஹன், சுத்திகரிப்பு நிலையத்திற்குப் பெரும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும், ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதால் அதன் சிதறல்களே விழுந்ததாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும், அந்தப் பகுதியில் சில இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹைஃபா மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

Source link