இஸ்லாமாபாத்: மேற்காசிய நாடான ஈரானில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். அங்கு அவர்களின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி, சமீபத்தில் அமெரிக்க, இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இதை கண்டித்து, நம் அண்டை நாடான பாகிஸ்தானில் போராட்டங்கள் நடந்தன. பாகிஸ்தானில் சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். அங்கு, 20 சதவீதம் அளவுக்கு ஷியா முஸ்லிம்கள் உள்ளனர்.
இந்நிலையில், ராவல்பிண்டியில் இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தான் ராணுவ தளபதி முனீர், ”ஈரானை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஷியா முஸ்லிம்கள் அந்த நாட்டுக்கு செல்லுங்கள்,” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் ஷியா மதத் தலைவர்கள், ‘முனீர் எங்கள் சமூகத்தை அவமதித்துவிட்டார்; அவரது ராணுவம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வேலைக்காரன் போல் செயல்படுகிறது’ என, குற்றம்சாட்டி உள்ளனர்.
