நமது நிருபர்
ஈரான் நாட்டின் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களுக்கு ஆளாகி வரும் வளைகுடா நாடுகளுக்கு, வான் பாதுகாப்பு கவச உதவி வழங்க, இத்தாலி முன் வந்துள்ளது.
ஈரானுக்கும், இஸ்ரேல், அமெரிக்க கூட்டுபடைகளுக்கும் இடையேயான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 6வது நாளாக தொடரும் இந்த போரில் இருதரப்பும் ட்ரோன் மற்றும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரான் போர்கப்பல்கள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.
குறிப்பாக, வளைகுடா நாடுகளில் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால், மேற்காசியாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறதுஇந்நிலையில், வளைகுடா நாடுகளுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குவதாக இத்தாலி நாட்டின் பிரதமர் மெலோனி அறிவித்துள்ளார். இது குறித்த அவர் கூறியதாவது:
வளைகுடா நாடுகளுக்கு வான் பாதுகாப்பு உதவிகள் வழங்க திட்டமிட்டுள்ளோம். அவர்கள் நமது நட்பு நாடுகள் என்பதற்காக மட்டுமல்ல, அப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான இத்தாலியர்கள் வசிக்கின்றனர். அங்குள்ள நமது 2,000 வீரர்களையும் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு மெலோனி கூறினார்.
