ஈரான் – இஸ்ரேல் மாறி மாறி குண்டு வீசி தாக்குதல்; மேற்காசிய நாடுகளில் சேதம்

டெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், அந்நாட்டின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதையடுத்து, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து, இரண்டாவது நாளாக நேற்றும் இரு தரப்பும் தாக்குதல்களை தொடர்ந்ததால், மேற்காசிய நாடுகள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளன.

மேற்காசிய நாடான ஈரான் – அமெரிக்கா இடையே கடந்த 2015ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் பயனற்றது என கூறி, தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தன் முதல் பதவி காலத்தின் போது, 2018ல் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில், தற்போது இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற பின், அணுசக்தி ஒப்பந்தத்தை மீண்டும் ஈரானுடன் ஏற்படுத்துவதற்கான முயற்சியில் டிரம்ப் ஈடுபட்டார். இதற்கான மறைமுக பேச்சு, மேற்காசிய நாடான ஓமன் மத்தியஸ்தத்துடன், கடந்த மாதம் மூன்று கட்டங்களாக நடந்தது.

இதில், அமெரிக்கா கடும் நிபந்தனைகளை ஈரானுக்கு விதித்தது. இதை ஏற்க மறுத்ததையடுத்து, நேற்று முன்தினம் மற்றொரு மேற்காசிய நாடான இஸ்ரேலுடன் இணைந்து, ஈரான் மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல் தொடுத்தது. இத்தாக்குதலில், ஈரானின் தலைநகர் டெஹ்ரான் மற்றும் அணுசக்தி மையங்கள் உள்ள நகரங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின.

ஈரானும் பதிலுக்கு இஸ்ரேல் மீதும், மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது.

அமெரிக்கா நடத்திய தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் இல்லம் மற்றும் அலுவலகம் கடுமையாக பாதிப்புக்குள்ளானது. இதில், ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். இது, உலகம் முழுதும் உள்ள அவரது ஆதரவாளர்களையும், முஸ்லிம்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், ஈரானிய புரட்சிகர காவல்படை, இதுவரை இல்லாத அளவுக்கு இஸ்ரேல் மற்றும் மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து, தாக்குதலை தீவிரப்படுத்தப் போவதாக அறிவித்தது.

இதன்படி, ஈரானில் இருந்து நுாற்றுக்கணக்கான ஏவுகணைகள் இஸ்ரேலின் முக்கிய நகரங்களையும், பஹ்ரைன், குவைத் மற்றும் கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களையும் குறி வைத்து ஏவப்பட்டன. இத்தாக்குதலில், இஸ்ரேலின் டெல் அவிவ் பகுதியில் ஒரு பெண் உயிரிழந்தார். ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் ஏவுகணை சிதறல் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

இச்சூழலில் ‘பதிலடி கொடுப்பதாக நினைத்து ஈரான் தாக்குதல் நடத்தினால், அதன் விளைவுகள் மேலும் மோசமடையும்’ என ஈரானுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

பாதுகாப்பு கவுன்சிலில் மோதல்

ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களிலேயே, 15 நாடுகளைக் கொண்ட ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் நியூயார்க்கில் கூட்டம் துவங்கியது.
கூட்டத்தில் பேசிய அமெரிக்க துாதர் மைக் வால்ட்ஸ் பேசுகையில், ஈரானின் அணு ஆயுத கனவை நிறைவேற்ற அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்ற தீர்க்கமான முடிவை அதிபர் டிரம்ப் எடுத்துள்ளார்,” என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய இஸ்ரேல் துாதர், ‘அச்சுறுத்தலை தடுக்கவே நாங்கள் அமெரிக்கா உடன் இணைந்து செயல்பட்டோம். ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் ஏவுகணை தளங்களை எங்களின் இலக்கு’ என்று கூறினார்.
இதையடுத்து பேசிய ஈரான் துாதர், ‘இது அறிவிக்கப்படாத ஆக்கிரமிப்பு மற்றும் போர்க்குற்றம். தெற்கு ஈரானில் உள்ள மினாப் நகரில் பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்காவும், இஸ்ரேலும் சர்வதேச சட்டங்களை மீறியுள்ளன’ என குறிப்பிட்டார்.
இதன்பின், அமெரிக்க துாதர் மற்றும் ஈரான் துாதர் இருவரும் நேரடி மோதலில் ஈடுபட்டனர். இருதரப்பிடையே ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு ஐ.நா., பொதுச்செயலர் அந்தோணியோ குட்டரெஸ் கடும் கண்டம் தெரிவித்தார்.

விமான சேவைகள் பாதிப்பு

ஈரான் மீதான தாக்குதலையடுத்து, மேற்காசியா மற்றும் அதைத் தாண்டிய பகுதிகளிலும் விமானப் போக்குவரத்து சனிக்கிழமை பாதிக்கப்பட்டது. இப்பிராந்திய நாடுகள் தங்கள் வான்வெளியை மூடியதுடன், ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளை ஆசியாவுடன் இணைக்கும் முக்கிய விமான நிலையங்கள் நேரடியாகத் தாக்குதலுக்கு உள்ளாகின. மோதல் இரண்டாவது நாளை எட்டியுள்ள நிலையில், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் துபாய்க்கான அனைத்து விமானங்களையும் நேற்று மதியம் வரை ரத்து செய்திருந்தது.
கத்தாரின் தோஹா விமான நிலையம் திங்கள் காலை வரை மூடப்பட்டிருக்கும். இஸ்ரேலிய வான்வெளியும் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டிருந்தது. இஸ்ரேல், கத்தார், சிரியா, ஈரான், ஈராக், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் தங்கள் வான்வெளியை மூடியதையடுத்து, சனிக்கிழமை நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த முடக்கத்தால் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் தவித்து வருகின்றனர்.
பாகிஸ்தானிலும் சர்வதேச விமான சேவைகள் நிறுத்தம் பாகிஸ்தானிலிருந்து மேற்காசிய நாடுகளுக்குச் செல்ல வேண்டிய, பல்வேறு விமான நிறுவனங்களின் 184 சர்வதேச விமானங்கள் கடந்த சனிக்கிழமை முதல் ரத்து செய்யப்பட்டதாக அந்நாட்டு விமான போக்குவரத்து துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். விமான சேவை ரத்தால், இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி, குவெட்டா, சியால்கோட், பெஷாவர் மற்றும் பைசலாபாத் ஆகிய நகரங்களிலிருந்து துபாய், அபுதாபி, தோஹா, மஸ்கட், ஷார்ஜா, ரியாத் மற்றும் ஜெட்டா ஆகிய இடங்களுக்குச் செல்லவிருந்த விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இஸ்லாமாபாத்திலிருந்து குறைந்தது 40 விமானங்களும், லாகூரிலிருந்து 46 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த செய்தித் தொடர்பாளர், உள்நாட்டு விமானப் போக்குவரத்து வழக்கம் போல் இயங்குவதாக குறிப்பிட்டார்.

Source link