ஈரான் தாக்குதல்களால் சிதறிய அமெரிக்க தளங்கள்: தற்காலிக இடங்களுக்கு ராணுவ வீரர்கள் மாற்றம்

வாஷிங்டன்: ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால், மேற்காசியாவில் உள்ள பல அமெரிக்க ராணுவ தளங்கள் பலத்த சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால், தற்காலிக தளங்களுக்கு இடம் பெயர வேண்டிய கட்டாயத்திற்கு அமெரிக்க படைகள் தள்ளப்பட்டுள்ளன.மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்., 28ல் துவங்கிய போர், 27வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் மற்றும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் வாயிலாக தாக்குதல் நடத்தி வருகிறது.

மேற்காசியா முழுதும் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்திய தொடர் தாக்குதல்களால், பல முக்கியமான அமெரிக்க தளங்கள் பெருத்த சேதமடைந்துள்ளன. அவற்றை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அமெரிக்க படைகள், தற்காலிக தளங்களுக்கு மாறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மேற்காசியாவில், 13 அமெரிக்க ராணுவத் தளங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன. விமானப்படைகள் வழக்கம்போல் செயல்பட்டாலும், தரைப்படையினர், ஹோட்டல்கள், தற்காலிக இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.குவைதில் உள்ள தளங்கள் மிக மோசமான பாதிப்புகளை சந்தித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

குவைத்தில் உள்ள போர்ட் ஷுவைபா, அலி அல் சலேம் விமானப்படை தளம் மற்றும் கேம்ப் புஹ்ரிங் போன்ற தளங்கள் ஈரானிய தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன. தற்காலிக இடங்களைத் தவிர, சில பணியாளர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தளங்கள் சேதமடைந்து, படைகள் சிதறடிக்கப்பட்டு, ஈரான் தன் தாக்குதல் திறனை வெளிப்படுத்தி வருவதால் மேற்காசியாவில் அமெரிக்காவின் நீண்டகால ராணுவ மையங்கள் கூட நேரடி அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

16 விமானங்களை இழந்தது!

ஈரானுடனான போர் துவங்கி ஒரு மாதத்திற்குள், அமெரிக்கா 16 போர் விமானங்களை இழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இவை அனைத்தும் எதிரி நாட்டு தாக்குதலால் மட்டும் நிகழவில்லை.

* எம்.க்யூ., 9 வகை ட்ரோன்கள் 12 ட்ரோன்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதில், 9 ட்ரோன்கள் ஈரான் ஏவுகணை தாக்குதலிலும், மற்றவை விபத்து மற்றும் தரைவழி தாக்குதலிலும் அழிக்கப்பட்டுள்ளன

* குவைத் வான்வெளியில் ஈரானின் ஏவுகணைகளை இடைமறிக்க முயன்றபோது, குவைத் வான் பாதுகாப்பு அமைப்பால் தவறுதலாக 3 எப் – 15 ரக போர் விமானங்கள் சுடப்பட்டதாகவும், இதின் விமானிகள் பத்திரமாக தப்பியதாகவும் கூறப்படுகிறது

*ஈராக் வான் பகுதியில் கே.சி., – 135 வகை எரிபொருள் நிரப்பும் விமானங்கள் வானில் மோதிக்கொண்டதில், 6 வீரர்கள் உயிரிழந்தனர்

* உலகின் அதிநவீன போர் விமானமாக கருதப்படும் எப் – 35 ரக விமானங்கள், ஈரானிய தரைப்படை தாக்குதலால் சேதமடைந்து அவசரமாக தரையிறக்கப்பட்டன

* இவை மட்டுமின்றி, ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களால் அமெரிக்காவின் வான் பாதுகாப்பு கட்டமைப்புகளும் பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன

* கத்தாரில் உள்ள நீண்ட துார எச்சரிக்கை ரேடார் மற்றும் ஜோர்டானில் உள்ள ‘தாட்’ ஏவுகணை தடுப்பு அமைப்பின் முக்கிய ரேடார் ஆகியவை ஈரானின் தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளன.

‘ஹிட் லிஸ்ட்’லிருந்து நீக்கம்!

ஈரான் – அமெரிக்கா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்பட்டு வருகின்றன. இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் அமெரிக்காவுடனும், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஈரானுடனும் பேச்சு நடத்தினர்.பாகிஸ்தானின் தலையீட்டிற்கு பின், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் அந்நாட்டு பார்லிமென்ட் சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் ஆகியோரை தன் ‘ஹிட் லிஸ்ட்’லிருந்து இஸ்ரேல் நீக்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

1,937 பேர் பலி; 24,800 பேர் காயம்

போரில் இதுவரை ஈரானில் மட்டும், 240 பெண்கள், 212 குழந்தைகள் உட்பட 1,937 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை துணை அமைச்சர் அலி ஜபாரியன் தெரிவித்துள்ளார். மேலும், இப்போரினால் 24,800 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், சர்வதேச ஊடகங்களின் அறிக்கைகளின்படி, உயிரிழப்பு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.இப்போரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலை இடைமறித்தபோது விழுந்த சிதறல்களால் அபுதாபியில் இருவர் உட்பட 11 பேர் பலியாகியுள்ளனர்.

10,000 இலக்குகள் மீது தாக்கு!

அமெரிக்க கடற்படை அட்மிரல் பிராட் கூப்பர் கூறியதாவது:ஈரானில், 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டுள்ளன. எங்கள் வெற்றிகளையும், நட்பு நாடான இஸ்ரேலிய வெற்றிகளையும் ஒருங்கிணைத்து பார்த்தால் நாங்கள் திட்டமிட்டதைவிட கூடுதலாக ஆயிரக்கணக்கான இலக்குகளை தாக்கியுள்ளோம்.எங்கள் துல்லியமான தாக்குதல்கள் ஈரானின் வான்பாதுகாப்பை நிலைகுலைய செய்துள்ளன. ஈரானின் மிகப்பெரிய கடற்படை கப்பல்களில் 92 சதவீதத்தை அழித்துள்ளோம்.ஈரானின் ஏவுகணை, ட்ரோன் மற்றும் கடற்படை உற்பத்தி மையங்கள் மற்றம் கப்பல் கட்டும் தளங்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் நாங்கள் அழித்துள்ளோம். இன்னும் நாங்கள் முடிக்கவில்லை. ஈரானின் பரந்த ராணுவ உற்பத்தி கட்டமைப்பை முழுமையாக ஒழிக்கும் நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஈரான் கடற்படை தளபதி பலி

மேற்காசிய நாடான ஈரானின் சக்திவாய்ந்த இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் கடற்படைப் பிரிவுக்கு தலைமை வகித்து வந்தவர் அலிரேசா டங்சிரி, 64. நேற்று அதிகாலை ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகில் உள்ள பந்தர் அப்பாஸ் துறைமுக நகரில் நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் டங்சிரியும், அவருடன் உயர் அதிகாரிகளும் உயிரிழந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.ஆனால் இதனை ஈரான் உறுதிப்படுத்தவில்லை. ஏற்கனவே ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலர் அலி லாரிஜானி உட்பட ராணுவ தளபதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

Source link