தோஹா: தன் அண்டை நாடுகள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள், ஒரு ஆபத்தான தவறான கணக்கீடு மற்றும் பெரிய துரோகம் என கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் கடும் கண்டம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.இதனால், மேற்காசியாவில் உள்ள பல நாடுகளின் உட்கட்டமைப்பு சேதமடைந்துள்ளன. ஈரானின் இந்த தாக்குதல்களுக்கு அதன் அண்டை நாடுகள் ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளன.
இது குறித்து கத்தார் பிரதமர் அப்துல் ரஹ்மான் கூறியுள்ளதாவது:எங்கள் அண்டை நாடுகளுக்கு எதிரான எந்தப் போரிலும் நாங்கள் பங்கேற்க போவதில்லை என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தியிருக்கிறோம். மேற்காசிய நாடுகள் மீதான தாக்குதல்களை நாங்கள் ஈரானிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. நாங்கள் எப்போதும் அவர்களுடன் நல்லுறவை பேணவே முயன்றோம்.
ஆனால், அவர்கள் கூறும் நியாயங்களும், காரணங்களும் முற்றிலும் நிராகரிக்கக்கூடியவை.அமெரிக்க ராணுவ இலக்குகளை மட்டுமே நோக்கமாக கொண்டு தாக்குதல் நடத்துவதாக ஈரான் கூறுவதை ஏற்க முடியாது. இதுவரை, 25 சதவீத தாக்குதல்கள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் நடந்துள்ளன.
இதற்கும் போருக்கும் என்ன சம்பந்தம்; அவர்கள் எதை அடைய விரும்புகிறார்கள்? அதிகளவிலான ராணுவ நடவடிக்கைகள் தற்போதைய நிலைமையை மேலும் மோசமாக்கும். ஆகவே, பேச்சு நடத்தி இதற்கு நல்ல தீர்வு காண வேண்டியது அவசியம். நாங்கள் தொடர்ந்து பதற்றத்தை தணிக்கவே முயற்சிப்போம். அவர்கள் எங்களின் அண்டை நாடு.இவ்வாறு அவர் கூறினார்.
