ஈரான் போர்: பாதிப்பை சந்தித்த 16 நாடுகள்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள், மேற்காசிய நாடான ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.தொடர்ந்து ஆறாவது நாளாக நேற்றும் மேற்காசியாவில் மோதல்கள் நடந்தன. ஏவுகணைகள், ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் வாயிலாக மாறி மாறி தாக்குதல்கள் நடக்கின்றன.வான்வழிகள் மூடப்பட்டுள்ளதால் விமானப் போக்குவரத்து முடங்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளதால், கச்சா எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆறு நாட்களாக நடக்கும் போரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்:

Image 1545157

1.ஈரான்

பலி எண்ணிக்கை – 1,230

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டு தாக்குதல்களால், அணுசக்தி மையங்கள், ஏவுகணை செலுத்தும் அமைப்புகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை தாக்கப்பட்டுள்ளன.

உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் உயர் ராணுவ அதிகாரிகளை இழந்துள்ளது. தொடரும் குண்டு மழையால் வீடுகள் உள்ளிட்டவையும் பலத்த சேதமடைந்துள்ளன. வான்வெளி மூடப்பட்டுள்ளது.

2.இஸ்ரேல்

பலி எண்ணிக்கை – 11

பெய்ட் ஷெமேஷ் பகுதியில் வழிபாட்டு தலம், மக்கள் பதுங்கும் இடம் தகர்க்கப்பட்டுள்ளது. டெல்அவிவ், ஜெருசலேமில் பல வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் சேதம். வான்வெளி மூடப்பட்டுள்ளது.

3.லெபனான்

பலி எண்ணிக்கை – 72

பால்பெக் நகரில் உள்ள குடியிருப்பு வளாகம், அரமவுன் மற்றும் சாடியாத் நகரங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. தொடர்ந்து நடந்த தாக்குதல்களால் 84,000க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். வான்வெளி மூடப்படவில்லை, பல விமான சேவைகள் ரத்து.

4.குவைத்

பலி எண்ணிக்கை – 8

குவைத் நகரில் குடியிருப்பு பகுதியில் விழுந்த உலோகத் துண்டால் 11 வயது சிறுமி உயிரிழந்தார்.போர்ட் ஷுஐபா பகுதியில் உள்ள அமெரிக்க துாதரக வளாக கட்டடம் தாக்கப்பட்டு தீப்பற்றி சேதமடைந்துள்ளது.வான்வெளி மூடப்பட்டது.

5.யு.ஏ.இ.,

பலி எண்ணிக்கை – 3

துபாயில் உள்ள அமெரிக்க துணை துாதரகத்திற்கு அருகே ஈரானின் ட்ரோன் விழுந்ததில் தீப்பற்றியது.

வான்வெளியில் 800க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் கண்டறியப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவற்றில் 57 தரையில் தாக்கியதாக கூறப்படுகிறது. 186 ஏவுகணைகளில் ஒன்று மட்டும் நாட்டின் எல்லையை தாக்கியது.

துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் கடற்கரை ஹோட்டல்கள் சேதமடைந்துள்ளன. அமேசான் நிறுவனத்தின் இரண்டு தகவல் தரவு மையங்களும் தாக்கப் பட்டன. வான்வெளி பகுதி அளவு மூடப்பட்டுள்ளது.

6.பஹ்ரைன்

பலி எண்ணிக்கை – 1

தாக்குதலில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆசியாவைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். நாட்டில் உள்ள அமேசான் தரவு மையம் அருகே ட்ரோன் தாக்குதல் நடந்ததாக தகவல். வான்வெளி மூடப்பட்டது.

7.சிரியா

பலி எண்ணிக்கை – 0

டமாஸ்கஸ் அருகே ஈரான் ஏவுகணை சிதறல்கள் விழுந்ததில் குழந்தைகள் உட்பட சிலர் லேசான காயம் அடைந்தனர். தெற்கு மாகாணங்களிலும் ஏவுகணை சிதறல்கள் விழுந்ததாக தகவல். வான்வெளி மூடப்பட்டது.

8.ஈராக்

பலி எண்ணிக்கை – 0

ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிலர் உயிரிழந்ததாக தகவல். வடக்கு ஈராக் எர்பிலில், ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் தடுக்கப்பட்டன.

அமெரிக்க துணைத் துாதரகம் அருகே பல ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டதில் தீப்பற்றி சேதம் ஏற்பட்டது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக முக்கிய எண்ணெய் கிணறு உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. வான்வெளி மூடப்பட்டது.

9.ஜோர்டான்

பலி எண்ணிக்கை – 0

ஈரான் ஏவுகணைகளை தடுத்தபோது விழுந்த உலோக சிதறல்களால், 5 பேர் காயமடைந்தனர். வான்வெளி திறந்துள்ளது; பல விமான சேவைகள் ரத்து.

10.சவுதி அரேபியா

பலி எண்ணிக்கை – 0

ரியாத்தில் உள்ள அமெரிக்க துாதரகம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் சிறிய அளவில் தீப்பற்றி சேதம் ஏற்பட்டது. ராஸ்தனுரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானது.

வான்வெளி – ஈராக் மற்றும் பெர்சியன் வளைகுடா எல்லைப் பகுதியில் மூடப்பட்டது.

11.எகிப்து

பலி எண்ணிக்கை – 0

போரின் தாக்கம் காரணமாக பல சர்வதேச கப்பல் நிறுவனங்கள் சூயஸ் கால்வாய் வழித்தடத்தை தவிர்த்துள்ளன. இதனால், எகிப்தின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வான்வெளி திறந்துள்ளது; சில விமானங்கள் ரத்து.

12.கத்தார்

பலி எண்ணிக்கை – 0

ஈரான் ஏவிய, 2 ஏவுகணைகளில் ஒன்று அல்-உதேய் ராணுவ தளத்தை தாக்கியது.வான்வெளி மூடப்பட்டது.

13.ஓமன்

பலி எண்ணிக்கை – 1 (இந்திய மாலுமி)

மஸ்கட் கடற்கரைக்கு அருகே எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் தாக்கியதில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார்.

ஹார்முஸ் ஜலசந்தியில் நடந்த தாக்குதலில் மேலும் 4 மாலுமிகள் காயமடைந்தனர். சலாலா மற்றும் டுக்ம் துறைமுகங்களும் ட்ரோன் தாக்குதலுக்கு இலக்கானது.வான்வெளி திறந்துள்ளது; பல விமான சேவைகள் ரத்து.

14.சைப்ரஸ்

பலி எண்ணிக்கை – 0

மத்திய தரைக் கடலில் உள்ள பிரிட்டன் ராணுவ விமான தளம் தாக்குதலுக்கு இலக்கானது.

15.துருக்கி

பலி எண்ணிக்கை – 0

ஈரான் செலுத்திய ஏவுகணை நாட்டின் வான்வெளி நோக்கி வந்தபோது, ‘நேட்டோ’ எனப்படும் ராணுவ ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைப்புகள் தடுத்து வீழ்த்தின. அதன் சிதறல்கள் ஹதாய் மாகாணத்தில் விழுந்தன.

16.இலங்கை

பலி எண்ணிக்கை – 87

இந்தியப் பெருங்கடலில் இலங்கை கடற்பரப்புக்கு வெளியே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில், ஈரான் போர்க் கப்பல் மூழ்கியது.

கப்பலில் இருந்த 180 பேரில் 87 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன; 32 பேர் உயிருடன் காப்பாற்றப்பட்டனர்.

Source link