அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல் முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அமெரிக்காவிடம் இருக்கும் ஏவுகணை தடுப்பு ஆயுதங்கள் வேகமாக காலியாகி வருகிறது. எனவே வரும் நாள்களில் அமெரிக்காவிற்கு ஆயுதப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்போரை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்று தெரியாமல் அமெரிக்கா திண்டாடிக் கொண்டிருக்கிறது. இவ்விவகாரத்தில் இஸ்ரேல் தங்களை இடியாப்ப சிக்கலில் மாட்டிவிட்டுவிட்டதாக அமெரிக்கா நினைக்கிறது.“இந்தப் போரில் எப்படியாவது எங்களுக்கு வெற்றியைக் கொடுங்கள்” என்று கடவுளிடம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கோரிக்கை விடுக்க ஆரம்பித்துவிட்டார். அதோடு விடாமல் அமெரிக்க அதிபரின் மாளிகையான வெள்ளை மாளிகையில் இதற்காக பிரார்த்தனைக் கூட்டத்திற்கு டொனால்டு ட்ரம்ப் ஏற்பாடு செய்து இருந்தார். இந்தப் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு நாடு முழுவதும் இருந்து முக்கிய கிறிஸ்தவ பாதிரியார்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவர்கள் அனைவரும் சேர்ந்து வெள்ளை மாளிகையில் டொனால்டு ட்ரம்ப் முன்னிலையில் பிரார்த்தனை செய்தனர். இதில் அமெரிக்காவிற்கு எப்படியும் ஈரான் போரில் வெற்றியைப் பெற்றுக் கொடுக்கவேண்டும் என்றும், போர்க்களத்தில் இருக்கும் தங்கள் வீரர்களைப் பாதுகாக்கவேண்டும் என்றும், நாட்டை வழிநடத்த அதிபர் ட்ரம்பிற்கு வலிமையைக் கொடுக்கவேண்டும் என்றும் பிரார்த்தனை செய்யப்பட்டது. டொனால்டு ட்ரம்ப் இதற்காக கண்ணை மூடிக்கொண்டு பிரார்த்தனை செய்த காட்சி, சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. ஈரான் தலைமையை மாற்றி விடுவேன் என்று கொக்கரித்து போரை தொடங்கிய டொனால்டு ட்ரம்ப், இப்போது போர் வெற்றிக்குக் கடவுள் துணையை நாடி இருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.வெள்ளை மாளிகையில் நடந்த பிரார்த்தனை வீடியோவை அதிபர் டொனால்டு ட்ரம்ப் உதவியாளரே சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 2021ம் ஆண்டு ஆப்கன் போருக்குப் பிறகு அமெரிக்கா நேரடியாக எந்த போரிலும் ஈடுபட்டது கிடையாது. இப்போதுதான் ஈரான் போரில் இஸ்ரேலுடன் சேர்ந்து ஈடுபட்டுள்ளது. தற்போது நடந்து வரும் போருக்கு அமெரிக்க மக்களில் 50 சதவிகிதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தவிர மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ஆதரவு முஸ்லிம் நாடுகளும் ஈரான் மீதான போருக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இரண்டு நாடுகள் வெளிப்படையாக தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
Source link
