ஈரான் ராணுவத்தின் மேற்பார்வையில் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்துக்கு அனுமதி – ஈரான் அறிவிப்பு

பாகிஸ்தான் மதியஸ்தத்தை ஏற்று ஈரான் மீதான தாக்குதலை 2 வார காலத்திற்கு நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்த நிலையில் பாகிஸ்தான் தலைநகர் ஏப்ரல் 10 அன்று பேச்சுவார்த்தைக்கு ஈரான் உச்ச பாதுகாப்பு கவுன்சில் சம்மதம் தெரிவித்துள்ளது.

மேலும் ஈரான் தன் கட்டுப்பாடில் வைத்துள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பிற நாட்டு கப்பல்கள் செல்ல அனுமதிப்பது குறித்தும் ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது.

இதுகுறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி வெளியிட்ட அறிக்கையை அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் மறுபதிவு செய்துள்ளார்.

அப்பாஸ் அரக்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரான் இஸ்லாமியக் குடியரசின் சார்பாக, இப்பகுதியில் போரை முடிவுக்குக் கொண்டுவர அயராது பாடுபட்ட எனது அன்புச் சகோதரர்களான பாகிஸ்தான் பிரதமர் மேதகு ஷெரீப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் முனீர் ஆகியோருக்கு எனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் ஷெரீப் தனது ட்விட்டர் பதிவில் விடுத்த சகோதரத்துவ வேண்டுகோளுக்கு இணங்கவும், தனது 15 அம்ச முன்மொழிவின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா விடுத்த கோரிக்கையையும், பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படையாக ஈரானின் 10 அம்ச முன்மொழிவின் பொதுவான கட்டமைப்பை ஏற்றுக்கொள்வதாக அமெரிக்க அதிபர் அறிவித்ததையும் கருத்தில் கொண்டும், ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்புக் குழுவின் சார்பாக நான் பின்வருமாறு அறிவிக்கிறேன்.

ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், எமது வலிமைமிக்க ஆயுதப் படைகள் தங்களின் தற்காப்பு நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளும்.

இரண்டு வார காலத்திற்கு, ஈரானின் ஆயுதப் படைகளுடன் ஒருங்கிணைந்து மற்றும் தொழில்நுட்ப வரம்புகளை உரிய முறையில் கருத்தில் கொண்டு, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பாதுகாப்பான பயணம் சாத்தியமாகும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் ஈரான் பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள 10 அம்ச திட்டத்தில் ஈரான் ராணுவத்தின் மேற்பார்வையில் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை அனுமதிப்பதும் ஒன்றாகும்.

Source link