கீவ்: ”ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை வரும் ஜூன் மாதத்திற்குள் முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா காலக்கெடு நிர்ணயித் துள்ளது,” என, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் நான்கு ஆண்டுகளை எட்டியுள்ளது. இப்போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்கா ஒரு அமைதி ஒப்பந்தத்தை முன்மொழிந்துள்ளது.
இதில் ரஷ்யா - உக்ரைன் விரைந்து கையெழுத்திடும் வகையில் ஒரு காலக்கெடுவை அமெரிக்கா தற்போது நிர்ணயித்துள்ளது. இதன்படி நடப்பாண்டு கோடை காலம் அதாவது ஜூன் மாதத்துக்குள் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், போர் நிறுத்தம் குறித்த அமைதி பேச்சின் அடுத்த சுற்றை, அமெரிக்காவின் மியாமி நகரில் நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்; இதில் பங்கேற்க உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது.
