சட்டமன்ற தொகுதி வாரியாக வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டதும் வரும் 15-ம்தேதி வரை மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஒட்டப்பட வேண்டிய வேட்பாளரின் வண்ணப் புகைப்படம் மற்றும் சின்னத்துடன் கூடிய தாள் (பேலட் பேப்பர்) அச்சிடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 16-ம்தேதி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரத்தில் ‘பேலட் பேப்பர்’ ஒட்டும் பணி மேற்கொள்ளப்படும்.
இளம்சிவப்பு(பிங்க்) வண்ணத்தில் உள்ள அந்த ‘பேலட் பேப்பரில்’ முதலில் வரிசை எண், வேட்பாளரின் பெயர், அடுத்ததாக வேட்பாளரின் வண்ணப்புகைப்படம், அவருக்கான தேர்தல் சின்னம் ஆகியவை தெளிவாக அச்சிடப்பட்டு உள்ளன.
‘பேலட் பேப்பரில்’, வேட்பாளரின் பெயர்களை அகர வரிசையில் தேர்தல் கமிஷன் வரிசைப்படுத்தும். அதை 4 பிரிவுகளாக தேர்தல் கமிஷன் பிரித்துள்ளது.
முதலாவது, அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளின் வேட்பாளரின் பெயர்கள், அகர வரிசையில்(அந்தந்த மாநில மொழியில்) வரிசைப்படுத்தப்படும்.
2-வதாக, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளின் வேட்பாளரின் பெயர்கள் வரிசைப்படுத்தப்படும்.
3-வதாக அங்கீகரிக்கப்படாத பதிவு பெற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் பெயர்கள் அகர வரிசையில் வரிசைப்படுத்தப்படும்.
4-வதாக சுயேச்சை வேட்பாளர்களின் பெயர்கள் அகர வரிசையில் வரிசைப்படுத்தப்படும்.
கடைசி பெயராக ‘நோட்டா’(யாருக்கும் வாக்களிக்கவில்லை) இடம்பெறும்.
