புதுடில்லி : விமான பணியாளர்களுக்கான உடற்தகுதி விதிகளை, ‘ஏர் இந்தியா’ விமான நிறுவனம் கடுமையாக்கி உள்ளது. இதன்படி, வரம்புகளை மீறும் பணியாளர்கள், பணி நீக்கம், சம்பள இழப்பு போன்றவற்றை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
‘டாடா’ குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், நம் நாடு உட்பட உலகம் முழுதும் விமான சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனம், விமான பணியாளர்களுக்கான உடற்தகுதி விதிகளை திருத்தம் செய்துள்ளது.
இது குறித்து, ஏர் இந்தியா வெளியிட்டு உள்ள சுற்றறிக்கை: ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பேணுவதை ஊக்குவிக்க, விமானங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான உடற்தகுதி விதிகள் திருத்தப்பட்டுள்ளன. இதன்படி, பணியாளர்கள் தங்கள் பி.எம்.ஐ., எனப்படும் உடல்நிறை குறியீட்டை குறிப்பிடப்பட்ட வரம்புக்குள் வைத்திருக்க வேண்டும். பயிற்சி, பாதுகாப்பு நடைமுறைகளின் போதும், விமானப் பயணங்களுக்கு முன்னும் பின்னும் பல்வேறு கட்டங்களில் பி.எம்.ஐ., சோதனை கட்டாயமாக்கப்படுகிறது.
ஏர் இந்தியாவை பொறுத்தவரை பி.எம்.ஐ., குறியீடு, 30 அல்லது அதற்கும் கீழ் இருக்க வேண்டும். 18க்கும் கீழ் குறைவாக உள்ளவர்கள் குறைந்த எடைப்பிரிவிலும், 25 – 29.9 வரை உள்ளவர்கள் அதிக எடைப்பிரிவிலும் வகைப்படுத்தப்படுவர். மருத்துவ சோதனையில் தகுதி பெறாத விமானி அல்லது பணியாளர்கள், தகுதியானவர் என அறிவிக்கப்படும் வரை ஊதியமில்லா விடுப்பில் வைக்கப்படுவர். புதிய விதிகள், மே 1 முதல் நடைமுறைக்கு வரும்.இது, தற்போது பணியில் இருக்கும் விமானப் பணிக்குழுவினர் மற்றும் பயிற்சி பெறுபவர்களுக்கும் பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
