உடல் பருமன் சிகிச்சை மருந்துகளுக்கு மறைமுக விளம்பரம் செய்யக்கூடாது: மத்திய அரசு எச்சரிக்கை

புதுடில்லி: ‘உடல் பருமன் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு, டாக்டர்களின் பரிந்துரைப்படி மட்டுமே வழங்கப்படும் மருந்துகளுக்கான மறைமுக விளம்பரங்களை கடுமையாக கட்டுப்படுத்த வேண்டும்’ என, மத்திய அரசின் டி.சி.ஜி.ஐ., எனப்படும் மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உடல் பருமன், அதிக கொழுப்பு, வளர்சிதை மாற்றம் போன்றவற்றுக்கு, டாக்டர்கள் பரிந்துரையுடன் எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகளை விழிப்புணர்வு பிரசாரம் என்ற பெயரில், சில மருந்து நிறுவனங்கள் மறைமுகமாக விளம்பரம் செய்துள்ளன.

இது குறித்து, டி.சி.ஜி.ஐ., எனப்படும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகத்துக்கு புகார்கள் சென்றன.

இதையடுத்து, டி.சி.ஜி.ஐ., இயக்குநர் டாக்டர் ராஜீவ் சிங் ரகுவன்ஷி வெளியிட்ட அறிக்கை:

மருந்து நிறுவனங்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் மருந்துகளை சந்தைப்படுத்த அனுமதி பெற்ற நிறுவனங்கள் அனைத்தும், மருந்துகள் மற்றும் அழகு சாதன சட்ட விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

டாக்டர் பரிந்துரையுடன் மட்டுமே வழங்கப்பட வேண்டிய மருந்துகளை அச்சு, மின்னணு, இணையம், சமூக வலைதளம் உள்ளிட்ட எந்த தளத்தின் மூலமாகவும் விளம்பரப்படுத்த கூடாது. அது தடை செய்யப்பட்டுள்ளது.

மறைமுக விளம்பரம் செய்து, மருந்தின் பெயர் பொதுமக்களின் நினைவில் நிற்கும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் விதிமீறலாகக் கருதப்படும்.

மருந்துகளின் தவறான பயன்பாட்டை தொடர்ந்து கண்காணிக்க ஆபத்து மேலாண்மை திட்டம் என்ற விரிவான திட்டத்தை நிறுவனங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

உடல் பருமனுக்கு உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சியுடன் கூடிய முழுமையான சிகிச்சை முறைகள் தேவைப்படும். இதற்கு மருந்து மூலம் தீர்வு வழங்குவதாக தவறான எண்ணத்தை உருவாக்கும் வகையில் விளம்பரம் செய்யக் கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link