சென்னை: ‘உண்மையான காங்கிரஸ், தன் பக்கம் இருப்பதாகக் கூறிய, த.வெ.க., தலைவர் விஜய்க்கு, காங்., – எம்.பி., ராகுல் பதில் அளிக்க வேண்டும்’ என, காங்.,கை சேர்ந்த கர்நாடக துணை முதல்வர் சிவகுமாரிடம், முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டசபை தேர்தலில், த.வெ.க.,வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டுமென, ராகுல் விரும்பியதாக கூறப்பட்டது.
அதிருப்தி
அவருக்கு நெருக்கமான பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் எம்.பி., உள்ளிட்டோர், இது பற்றி வெளிப்படையாக பேசினர். ஆனால், சோனியா, கார்கே, சிதம்பரம் போன்ற மூத்த தலைவர்களால், தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணி உறுதியானது.
சமீபத்தில் பேட்டியளித்த பிரவீன் சக்கரவர்த்தி, ‘ஒரு பக்கம் சின்ன தோசையை கொடுத்து, பகிர்ந்து சாப்பிட சொன்னார்கள், மற்றொரு பக்கம் கல்யாண விருந்து வைத்து அழைத்தனர்’ என, த.வெ.க.,வுடன் கூட்டணி அமையாதது குறித்து தன் அதிருப்தியை வெளியிட்டதோடு, மேலிட அனுமதியுடன்தான் விஜயை, சந்தித்ததாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையே, கடந்த 8ம் தேதி, நெல்லையில் பிரசாரத்தில் பேசிய த.வெ.க., தலைவர் விஜய், ‘சில, பல கோடி ரூபாய்களை கொடுத்து, காங்கிரசை தன் சட்டை பையில் முதல்வர் ஸ்டாலின் போட்டுக் கொண்டார். ஆனால், உண்மையான காங்கிரஸ் த.வெ.க., பக்கம் நிற்கிறது’ என்றார். இது, தி.மு.க.,வினரை கோபமடையச் செய்து உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னை வந்த, காங்கிரசை சேர்ந்த கர்நாடக துணை முதல்வர் சிவகுமாரிடம் முதல்வர் ஸ்டாலின் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, ‘தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்து வரும் விஜய், இப்போது உண்மையான காங்கிரஸ் கட்சி, த.வெ.க., பக்கம் இருப்பதாக கூறியுள்ளார். இதனால், காங்கிரஸ் ஓட்டுகள் விஜய் பக்கம் செல்ல வாய்ப்புள்ளது.
‘இதை தடுக்க, காங்கிரசுக்கு கணிசமான ஓட்டு வங்கி உள்ள நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரியில் ராகுல் பிரசாரம் செய்ய வேண்டும்.
அப்போது, விஜய் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்வதோடு, அவரை விமர்சிக்க வேண்டும்’ என, ஸ்டாலின் வலியுறுத்தியதாக, காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.
முதிர்ச்சியற்ற அரசியல்
இதையடுத்து, சென்னையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, பேட்டியளித்த சிவகுமார், ‘த.வெ.க., தலைவர் விஜய், ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி. காங்கிரஸ் அவருடன் இல்லை. தி.மு.க.,வுடன்தான் இருக்கிறது. விஜய் சொல்வது, தமிழ் மாநில காங்கிரசாக இருக்கலாம்’ என்றார்.
பின், மறைமலை நகரில் நடந்த பிரசார கூட்டத்தில், ஸ்டாலினுடன் இணைந்து பங்கேற்ற சிவகுமார், ‘தி.மு.க., – காங்கிரஸ் கூட்டணி, வெற்றி கூட்டணி. நேற்று முளைத்த காளான்களால், இந்த கூட்டணியை பிரிக்க முடியாது’ என, விஜய் பெயரை குறிப்பிடாமல் விமர்சித்தார்.
எனினும், விஜய்க்கு ராகுல் தான் பதில் அளிக்க வேண்டும் என, சிவகுமாரிடம், ஸ்டாலின் வலியுறுத்தியதாக, காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.
