பெங்களூரு: ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, கர்நாடகாவில் உள்ள அரசு மற்றும் தனியார் உருது மொழி பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றி, மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கு, பா.ஜ.,வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. அரசு மற்றும் தனியார் உருது மொழி துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு, பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
உருது, பிற சிறுபான்மை மொழி பள்ளிகள் இயக்குநரகம் பிறப்பித்துள்ள உத்தரவின் படி, ‘பிப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து, மார்ச் 20 வரை, உருது மொழி பள்ளிகள், காலை 8:00 மணி முதல், பகல் 12:45 மணி வரை மட்டுமே நடக்கும்’ என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர் செஷாத் பூனாவாலா கூறியுள்ளதாவது: ரம்ஜான் பண்டிகைக்காக பள்ளிகளில் வகுப்பு நேரம் மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ஏதாவது ஒரு ஹிந்து பண்டிகைக்கு கூட, பள்ளிகளின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டதில்லை. நவராத்திரியின் போது இவ்வாறு அனுமதிப்பதில்லை.
ஓட்டு வங்கி அரசியலுக்காக சலுகைகள் காட்டக் கூடாது. மாணவர்கள் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டம் பின்பற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடக மேல்சபை எதிர்க்கட்சி தலைவரான, பா.ஜ.,வைச் சேர்ந்த சலவாதி நாராயணசாமி கூறியுள்ளதாவது: காங்கிரஸ் அரசு, சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் அரசியல் செய்கிறது. ஆனால், அக்கட்சி எப்போதும் ஹிந்து மதத்திற்கு எதிராகவே செயல்படுகிறது. ரம்ஜானுக்கு தனி கவனம் செலுத்தும் முதல்வர் சித்தராமையா, ஹிந்துக்கள் பற்றி கவலைப்படுவது கூட இல்லை. முஸ்லிம்களின் ஓட்டுகளை பெறுவதற்காக மாநில அரசு இவ்வாறு செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரசைச் சேர்ந்த மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், ”முஸ்லிம் மக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டவர்கள். அவர்கள் சமமாக நடத்தப்பட வேண்டும். பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றியமைத்ததை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், மக்கள் சமமாக நடத்தப்படுவதை விரும்பாதவர்கள் என்று அர்த்தம்,” என்றார்.
