ஆமதாபாத்: குஜராத்தில், செமிகண்டக்டர் எனப்படும், மின்னணு சாதனங்களில் பயன்படும், ‘சிப்’ உற்பத்தி ஆலையை நேற்று திறந்து வைத்த பிரதமர் மோடி, “உலக சந்தைக்கு செமிகண்டக்டர் வழங்கும் நம்பகமான நாடாக மாறி வருகிறோம்,” என கூறினார்.
குஜராத் மாநிலம், ஆமதாபாத் அருகே உள்ள சானந்தில், ‘கேன்ஸ் செமிகான்’ நிறுவனத்தின் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது:
கடந்த 2021ல், செமிகண்டக்டருக்கு உலகளவில் பற்றாக்குறை ஏற்பட்ட போது செமிகண்டக்டர் தொலைநோக்கு திட்டத்தை அறிமுகப் படுத்தினோம்.
இது, வெறும் தொழில் கொள்கை அல்ல. இந்த துறையில் நாட்டின் உறுதியை வெளிப்படுத்தும் திட்டமாக அமைந்தது.
அனைத்து உற்பத்தி துறைகளிலும் நாட்டை தன்னிறைவு அடையச் செய்ய வேண்டும் என்பதற்காக, இத்திட்டத்தின் இரண்டாவது கட்டம் சமீபத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
தற்போது துவக்கி வைத்த செமிகண்டக்டர் உற்பத்தி ஆலை, உலக செமிகண்டக்டர் வினியோக தொடரில் இணைந்துள்ளது. இது, பொருளாதார போட்டிக்கான காலம் மட்டுமல்ல, எதிர்கால தொழில்நுட்ப சூழலை வடிவமைக்கும் காலம்.
குஜராத் ஆலையின் உற்பத்தி, உலக சந்தைக்கு செமிகண்டக்டர் வழங்கும் நம்பகமான நாடு என்ற நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
