சென்னை: பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்தி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா. இவர், 2018ம் ஆண்டில், தன் சமூக வலைதள பக்கத்தில், தி.மு.க., – எம்.பி., கனிமொழியை அவமதிக்கும் கருத்துடன் பதிவு வெளியிட்டிருந்தார்.
அத்துடன், ‘திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல, இங்கும் பெரியார் சிலையை அகற்றுவோம்’ என்றும், மற்றொரு பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இவ்விரு கருத்துகளுக்கு எதிரான புகார்கள்படி பதிவான வழக்குகளை, சென்னை சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. இரண்டு வழக்குகளில் எச்.ராஜாவுக்கு, தனித்தனியாக ஆறு மாதம் சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து, 2024 டிச., 2ல் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து, எச்.ராஜா தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், எச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
அப்போது, மாதத்தின் ஒவ்வொரு முதல் வேலை நாளும், விசாரணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும்படி நிபந்தனை விதிக்கப்பட்டது.
தற்போது உடல்நலக் குறைவு காரணமாக, எச்.ராஜா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், அவருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை தளர்த்த கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ‘ராஜாவுக்கு பதிலாக, அவரது வழக்கறிஞர் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்’ என, நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டார்.
