ஏற்கனவே முழுக்க முழுக்க ஆண்மயப்பட்டிருக்கும் இந்த அரசியல் சூழலில் பெண்கள் இன்னமும் அந்நியப்படுத்தப்படுவார்கள்.
இப்போது விஜய்யின் வழி ஒரு புதிய தலைமுறையும் அரசியலை உற்று நோக்க தொடங்கியிருக்கிறது. அவர்கள் இப்போதுதான் இந்த நிலத்தின் அரசியலை கவனிக்க ஆரம்பிக்கிறார்கள். கடந்த 50 ஆண்டுக்கால தமிழகத்தின் சமூக வளர்ச்சியை அவர்களுக்கு புகட்ட வேண்டிய பொறுப்பு இங்கே கட்சி வேறுபாடின்றி அத்தனை அரசியலர்களுக்கும் இருக்கிறது. அதை செய்ய அவர்களின் மொழியில் சிக்கலான அரசியலை எளிமையாக உடைத்துப் பேசும் தலைவர்கள் இங்கே தேவை.
அதைவிடுத்து குழாயடி சண்டை போல நாற்றமடிக்கும் வகையில் பேசிக் கொண்டிருந்தால், திராவிடம் பேசிய இருபெரும் கட்சிகள் இந்த மண்ணுக்காக செய்த எந்த நற்பயன்களும் அவர்களை எட்டவே எட்டாது. நட்சத்திரங்களின் வெளிச்சமும் ஈர்ப்பும் மட்டுமே அவர்களை இழுக்கும்.
பிரசாரங்களில் அரசியலர்களின் பேச்சு மக்களை பண்படுத்தக் கூடியதாக, மாற்றுக்கட்சியினர் மீது ஆரோக்கியமான விமர்சனங்களை வைத்து உரையாடலை தூண்டும் விதத்திலானதாக அமைய வேண்டும். மாறாக, எடப்பாடி பழனிசாமியும் உதயநிதியும் செய்வதைப் போல கண்ணியக் குறைவாக அழுக்கு நிறைந்த சண்டையாக இருக்கக் கூடாது. இருவரும் தாங்கள் இருக்கும் உயரத்தையும் தங்கள் மீதிருக்கும் பொறுப்பையும் இனியாவது உணர வேண்டும்.
