"எடப்பாடி வார்த்தையை நாங்கள் நம்பினோம், ஆனால்.!"- தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தை காட்டிய பிரேமலதா

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2024-ல் கையெழுத்திட்டு வழங்கிய தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தை செய்தியாளர்கள் முன்பு காண்பித்திருக்கிறார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

திருவண்ணாமலை கோயிலில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், ” எதிர்க்கட்சி தலைவரின் பேச்சு கண்ணியமாக இருக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி தேமுதிக-வை அரை பர்சென்ட் என்கிறார்.

பிரேமலதா விஜயகாந்த்

உங்களுக்கு ஏன் வயிறு எரிகிறது. 2011-ல் இருந்து 2026 வரைக்கும் உங்களுடன் தானே இருந்தோம். இப்படி பேசுவது ஒரு முதலமைச்சர் வேட்பாளருக்கு அழகல்ல. இது கண்டிக்க தக்க விஷயம். தேமுதிகவுக்கு எம்.பி. பதவி தருவதாக கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி.

அவர் 2024 தேர்தலின் போது கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை இப்போது அண்ணாமலையார் கோவிலிலிருந்து வெளியிடுகிறேன். இதை இதுவரைக்கும் நான் காட்டியதே கிடையாது. நான் எம்.பி சீட் கொடுக்கிறேன் என்று எப்போது சொன்னேன் என்கிறார்.

இதோ பாருங்கள், 2024 மக்களவைத் தேர்தலில் 5 நாடாளுமன்ற சீட்டும், ஒரு ராஜ்ய சபாவும் தரப்படும் என்று ஒப்பந்தம் போட்டு நானும், எடப்பாடி பழனிசாமியும் கையெழுத்திட்டு இருக்கிறோம். 0.5 சதவீத கட்சி என்றால் ஏன் 5 நாடாளுமன்ற சீட்டும், ஒரு ராஜ்யசபா சீட்டும் தருவதாக கையெழுத்து போட்டுக் கொடுத்தீர்கள்?..

2024ல் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி 2025ல் எங்களுக்கு சீட் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் இந்த ஒப்பந்தத்தில் அவர் வருடத்தை போட்டு கொடுக்கவில்லை. அப்போது வருடத்தை போட்டுக் கொடுங்கள் என்று கேட்டபோது, எம்.ஜி.ஆர் ஜெயலலிதா காலத்திலிருந்தே வருடம் போடுவதில்லை.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

நம்பிக்கை முக்கியம், வார்த்தை முக்கியம் என்றார். அந்த வார்த்தையை நாங்கள் நம்பினோம். எங்களுக்கும் கீழ்தரமாக பேச தெரியும். ஆனால் கேப்டன் சொல்லி கொடுத்தது போல நாங்கள் மரியாதையாக இருக்கிறோம். மே 4-ம் தேதிக்குப்பின் எடப்பாடி ஐசியுவுக்கு போகாமல் இருந்தால் சரி” என்று விமர்சித்து தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தை செய்தியாளர்கள் முன்பு காண்பித்திருக்கிறார்.

ஒப்பந்தம் எதுவம் கையெழுத்திடவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link