எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பா? அமெரிக்கா புளுகு: சொல்கிறது ஈரான்

டெஹ்ரான்: மேற்காசியாவில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் நுாற்றுக்கணக்கான எண்ணெய் கப்பல்கள் சிக்கியுள்ளன.

கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு அளிக்கும் என்று, அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார்.

இந்நிலையில், அமெரிக்க எரிசக்தி அமைச்சர் கிரிஸ் ரைட் ஒரு பதிவில், ‘அமெரிக்க கடற்படை, ஒரு எண்ணெய் டேங்கரை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வெற்றிகரமாக அழைத்து சென்றது’ என்று நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

ஆனால் இந்த பதிவு, சில நிமிடங்களிலேயே நீக்கப்பட்டது. வெள்ளை மாளிகை உடனடியாக தலையிட்டு, ‘அமெரிக்க கடற்படை எந்த எண்ணெய் டேங்கரையும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அழைத்து செல்லவில்லை’ என்று தெளிவு படுத்தி உள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, அமெரிக்காவின் இந்த உரிமை கோரலை கடுமையாக மறுத்தது.

‘எந்த அமெரிக்க கடற்படை கப்பலும் ஹார்முஸ் ஜலசந்தியை நெருங்கத் துணியவில்லை. இது அப்பட்டமான பொய்’ என்று அந்தப் படை தெரிவித்துள்ளது.

ஜலசந்தியில் கண்ணிவெடி!

உலகின் மொத்த கச்சா எண்ணெயில் ஐந்தில் ஒரு பங்கு செல்லும் மிக முக்கியமான கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில், ஈரான் கண்ணி வெடிகளை பதிக்கத் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள து. கடந்த சில நாட்களில் மட்டுமே டஜன் கணக்கில் கண்ணிவெடிகள் பதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை கூறியுள்ளது. ‘கண்ணிவெடிகள் இருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும்; இல்லையெனில், முன்னெப்போதும் இல்லாத அளவு ஈரான் மீது கடுமையான ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.

16 கப்பல்கள் அழிப்பு!

ஹார்முஸ் ஜலசந்தி அருகில் இருந்த 16 கண்ணிவெடி வைக்கும் கப்பல்களை அமெரிக்க ராணுவம் அழித்ததாக வீடியோ வெளியிட்டுள்ளது. கண்ணிவெடிகளை அகற்ற டிரம்ப் கெடு விதித்த சில மணி நேரத்திற்குள்ளேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்கப்பட்டது பிரிட்டன் கப்பல்!

ஹார்முஸ் ஜலசந்தியில், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் சரக்கு கப்பல் ஒன்று அடையாளம் தெரியாத ஏவுகணையால் தாக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல், ஓமனுக்கு வடக்கே 20 கி.மீ., தொலைவில் இருந்தபோது தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலால் கப்பலில் தீப்பிடித்து, பெரும்பாலான ஊழியர்கள் கப்பலை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில், ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஒரு கொள்கலன் கப்பலும், தானியங்கள் மற்றும் கனிமங்களை ஏற்றிச் சென்ற கப்பலும் தாக்கப்பட்டுள்ளன. குஜராத் கப்பல் மீது தாக்குதல் ‘மயூரி நாரி’ என்ற ஆசிய நாடான தாய்லாந்தின் சரக்கு கப்பல், ஐக்கிய அரபு எமிரேட்சின் கலீபா துறைமுகத்தில் இருந்து குஜராத்தின் கண்ட்லா துறைமுகத்துக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது வழியில், ஓமன் அருகே ஏவுகணை ஒன்று கப்பலை தாக்கியது. இந்த தாக்குதலால் கப்பலின் ஒரு பகுதி தீப்பற்றியது. கப்பலில் இருந்த 20 மாலுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மூன்று மாலுமிகளை காணவில்லை; அவர்களை தேடும் பணி நடக்கிறது.

Source link