புதுடில்லி: கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு வழங்கும் கொள்முதல் விலையை குறைப்பது குறித்து, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்காசிய போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், அதற்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இந்த முழு நிதிச்சுமையையும், எரிபொருள் விற்பனை நிறுவனங்களே ஏற்றுக்கொண்டு உள்ளன.
இந்நிலையில், தற்போது இந்த இழப்பை ஈடுகட்ட, சுத்திகரிப்பு ஆலைகளிடம் இருந்து எரிபொருள் வாங்கும் விலையை முடக்கவோ அல்லது தள்ளுபடி விலையில் வாங்கவோ இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
இந்த முடிவின் காரணமாக, சுயமான சில்லரை எரிபொருள் விற்பனை நிலையங்கள் இல்லாமல், பெருநிறுவனங்களுக்கு மட்டுமே எரிபொருளை வழங்கும் ‘சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன், மங்களூர் ரி பைனரி’ உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக பாதிப்பை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
