புதுடில்லி: ”தேர்தல் தோல்விகளை ஜீரணிக்க முடியாததால், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து என்னை வசைபாடி வருகின்றன. கோடிக்கணக்கான மக்களின் ஆசிகள் இருக்கும் வரை, எனக்கு சவக்குழியை அவர்களால் தோண்ட முடியாது,” என பிரதமர் நரேந்திர மோடி மிக காட்டமாக விமர்சித்துள்ளார்.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு, பிரதமர் மோடி நேற்று முன் தினம் லோக்சபாவில் பதில் அளிக்க இருந்தார். ஆனால், எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக, அவரால் பதிலுரை நிகழ்த்த முடியவில்லை. இந்தச் சூழலில், ராஜ்யசபாவில் நேற்று மாலை 5:00 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலுரை வழங்கினார்; ஒரு மணி நேரம், 40 நிமிடங்கள் உரையாற்றினார்.
அவர் பேசியதாவது: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு பழங்குடியின பெண், நாட்டின் உயர் பதவியில் அமர்ந்திருப்பதை காங்கிரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஜனாதிபதியை மட்டும் அவர்கள் அவமதிக்கவில்லை.
அவர் வகிக்கும் அரசியல் சாசன பதவியையும், நம் நாட்டின் அரசியல் சாசனத்தையும் அவமதித்துவிட்டனர். ‘அன்பு கடை’யை திறந்து வைத்திருப்பதாக கூறுபவர்கள், ‘மோடி உங்களுக்கான குழியை தோண்டிவிட்டோம்’ என வெறுப்புணர்வுடன் முழக்கமிடுகின்றனர். சாதாரண ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவன், எப்படி பிரதமர் பதவியில் நீடிக்கலாம் எனஎரிச்சல்படுகின்றனர்.
பிரதமர் பதவி என்பது காங்கிரஸ் கட்சியின் குடும்ப சொத்தாகவே நினைக்கின்றனர். இதன் காரணமாகவே தினசரி என்னை வசைபாடுகின்றனர். தேர்தல் தோல்விகளை அவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. கோடானு கோடி தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் ஏழை மக்களின் ஆசிகள் இருக்கும் வரை, எனக்கான சவக்குழியை எதிர்க்கட்சிகளால் தோண்டவே முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
