புதுடில்லி: ”லோக்சபாவில் பேசுவதற்கான எனது ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளது,” என சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார்.
லோக்சபாவில் சீன ஊடுருவல் குறித்து ராகுல் பேச முயற்சித்தார். இதனால் அமளி ஏற்படவே லோக்சபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இது தொடர்பாக 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு ராகுல் கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் ராகுல் கூறியுள்ளதாவது: லோக்சபாவில் பேசுவதற்கான எனது ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளது. லோக்சபாவில் என்னை பேசவிடாமல் செய்தது அவையின் விதிமுறைகளை மீறியது ஆகும். எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னை குறித்து பேசுவதை தடுக்க முயற்சிப்பது கவலையை அளிக்கிறது. ஜனாதிபதி உரையின் ஒரு அங்கமான தேச பாதுகாப்பு குறித்து பார்லிமென்டில் விவாதம் நடத்தப்பட வேண்டும். இந்த ஜனநாயக அடிப்படை உரிமையை பறிப்பது என்பது முன்பு நடக்காத சூழல்.
பார்லிமென்ட் வரலாற்றில் முதல்முறையாக, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதை அரசின் உத்தரவில் பேரில் சபாநாயகர் தடுத்துள்ளார்.இது ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட களங்கம். இதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் ராகுல் கூறியுள்ளார்.
