சென்னை: எம்ஜிஆர் குறித்து சர்ச்சை கருத்து கூறியதாக நடிகர் ராஜேந்திர பிரசாத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் வெளியிட்ட அறிக்கை; நடிகர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்துக்கு, தற்போது தாங்கள் மேடை ஒன்றில் மாபெரும் நடிகர் காந்தாராவ் பற்றி பேசிய, பாராட்டிய காணொளி கண்டேன். ஒரு நடிகர் இன்னொரு நடிகரை பாராட்டுவது மகிழ்ச்சிக்குரியது. திறனை பரஸ்பரம் சிலாகிப்பது உன்னதமானது. ஆனால் தாங்கள் எம்ஜிஆரை கீழ்த்தரமான முறையில் ஒப்பிட்டு பேசியது எனக்கு அதிர்ச்சியூட்டும் மனச்சங்கடத்தை ஏற்படுத்தியது.
இது எனக்கு மட்டுமல்ல. இதை காணும் ஒவ்வொரு தமிழனுக்கும் ஏற்படுத்தும். தமிழருக்கு மட்டுமல்ல. உங்கள் சகாக்களே புண்பட்டு பேசிய ஒலி செய்திகள் அனுப்பியுள்ளனர். இச்செயல் கண்டிக்கத்தக்கது. நமக்குள் அதாவது தமிழ், தெலுங்கு சினிமா துறையில் திறமையானவர்களை பரிவர்த்தனை செய்துகொள்வது ஒரு நீண்டகால மரபாகவே இருந்து வருகிறது.
நடிகர்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என எல்லாரையும் என்.டி.ஆர் , ஏ.என்.ஆர்., எஸ்.வி.ரங்காராவ், சாவித்திரி, சாராதாம்மா, வாணிஸ்ரீ என பட்டியல் நீளும் நடிகர்களை நாங்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவராக போற்றுகிறோம்.
எம்ஜிஆர் வெறும் நடிகர் மட்டும் அல்ல. தமிழகத்தை ஆண்ட தலைவரும் கூட, அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆளுமை. என்.டி. ராமாராவ் கட்சி தொடங்குவதற்கு ஒரு முக்கிய காரணமாகவும் எம்ஜிஆர் இருந்திருக்கிறார். நான் விஷயத்தை நீட்டிக்க முயலவில்லை. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவனாக மட்டுமல்ல, ஒரு சினிமாக்காரனாக உங்களிடமிருந்து ஒரு மன்னிப்பை எதிர்பார்க்கிறேன். அது கட்டாயப்படுத்துதல் காரணமாக இல்லாமல், உங்கள் உள் மனதில் இருந்து அம்மன்னிப்பு வரவேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு நிறைவு செய்வீர் என்றே நம்புகிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
