கோலாலம்பூர்: எம்ஜிஆரின் தமிழ் பாடல்களை பிரதமர் அன்வர் இப்ராஹிம் மிகவும் விரும்புவது ஒரு அற்புதமான விஷயம் என்று கோலாலம்பூரில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் மோடிக்கு கோலாலம்பூர் விமான நிலையத்தில் சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் நேரில் வந்து பிரதமரை கட்டியணைத்து வரவேற்றார். கோலாலம்பூரில் நடக்கும் இந்திய வம்சாவளியினருடனான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் மற்றும் பிரதமர் மோடி ஒரே காரில் பயணித்தனர்.

அதன்பிறகு, இந்திய வம்சாவளியினரின் நிகழ்ச்சி அரங்கிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு மலேசியா வாழ் இந்தியர்கள் இடையே தமிழில் வணக்கம் கூறி பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார்.
சொன்னதை செய்தேன்
அவர் பேசியதாவது:உங்களின் இந்த சிறப்பான வரவேற்பு நமது கலாசாரத்தின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது. முதலாவதாக இந்த நிகழ்ச்சியில் என்னை பங்கெடுக்கச் செய்த நண்பர் அன்வர் இப்ராஹிமுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா-மலேஷியா நட்புறவு மற்றும் எதிர்கால சாத்தியக்கூறுகள் குறித்து அவர் பேசியதற்கு நன்றி.
அதுமட்டுமல்லாமல், விமான நிலையத்திற்கு வந்து என்னை வரவேற்றதுடன், அவர் (மலேஷிய பிரதமர்) தனது காரிலேயே என்னை இங்கு அழைத்து வந்தார். இது இந்தியா மற்றும் உங்கள் அனைவர் மீதும் அவர் வைத்திருக்கும் அன்பு மற்றும் மரியாதையை காட்டுகிறது.
கடந்தாண்டு மலேஷியாவில் நடந்த ஆசியான் மாநாட்டில் என்னால் பங்கேற்க முடியாமல் போனது. ஆனால், விரைவில் மலேஷியா வருவேன் என்று என்னுடைய நண்பரிடம் (அன்வர் இப்ராஹிம்) சொன்னேன். அதன்படி, இன்று நான் இங்கு வந்திருக்கிறேன்.
தனியிடம்
உங்கள் இதயங்களில் இந்தியாவிற்கு என்றுமே தனியிடம் உண்டு என்பதை நான் அறிவேன். எனது சொந்த மாநிலமான குஜராத்தில் 2001ம் ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்டபோது, உங்களில் பலரும் ஒன்றிணைந்து உதவி செய்தீர்கள். அதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியா சுதந்திரம் பெறுவதற்காக உங்களின் முன்னோர் பலரும் பெரும் தியாகங்களைச் செய்துள்ளனர். அவர்களில் பலர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து செயல்பட்டிருப்பார்கள். மலேசியாவில் உள்ள நேதாஜி சேவை மையம் மற்றும் நேதாஜி நல அறக்கட்டளை மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு தலைவணங்குகிறேன்.
உலகிலேயே இந்திய வம்சாவளியினர் அதிகம் வாழும் 2வது மிகப்பெரிய நாடு மலேஷியா தான். இந்தியா மற்றும் மலேஷிய மக்களை இணைக்கும் பல விஷயங்கள் உள்ளன. நாம் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்கிறோம். நமது மொழிகளுக்கும் மலாய் மொழிக்கும் இடையே உள்ள ஏராளமான பொதுவான வார்த்தைகளே இதற்கு காரணம்.
எம்ஜிஆர் பாடல்
இந்திய இசையும், திரைப்படங்களும் மலேசியாவில் மிகவும் பிரபலம் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். பிரதமர் அன்வர் இப்ராஹிம்கூட மிகச் சிறப்பாகப் பாடுவார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், இந்தியாவில் உள்ள பலருக்கு அது தெரியாது. அவரது கடந்த முறை இந்தியா வந்திருந்த போது, பலரும் வியந்து போனார்கள். அவர் இந்தியாவில் பழைய ஹிந்திப் பாடலைப் பாடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. அதோடு, அவர் எம்ஜிஆரின் தமிழ் பாடல்களை மிகவும் விரும்புவது ஒரு அற்புதமான விஷயம்.

தமிழர்கள் அதிகம்
விரைவில் மலேசியாவில் திருவள்ளுவர் கலாசார மையத்தை அமைக்கப் போகிறோம். துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் தமிழர்கள். மலேசியா போன்று என் அரசிலும் தமிழர்கள் அதிகம்.
இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை நோக்கி நகர்கிறது. உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் உட்கட்டமைப்பை இந்தியாவில் நிறுவியுள்ளோம். அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவுடன் தடையற்ற வர்த்தகத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளன. இந்தியாவின் வெற்றி, மலேசியாவின் வெற்றி, இவ்வாறு அவர் கூறினார்.
