பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை விட, இந்தியாவின் உண்மையான பொருளாதார முதுகெலும்பாக இருப்பது MSME துறைதான். ஒரு நிறுவனத்திற்கு 40 முதல் 100 ஊழியர்கள் வரை வேலை வாய்ப்பு வழங்கி, பல குடும்பங்களைப் பாதுகாப்பவர்கள் இவர்களே. வரி கட்டுவதிலும் இவர்கள் நேர்மையாகச் செயல்படுகிறார்கள். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அறிமுகம் மற்றும் கொரோனா பெருந்தொற்று என அடுத்தடுத்து மூன்று பெரிய அடிகளைத் தாங்கியும் இத்துறை இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
இப்போது எரிசக்தி நெருக்கடி மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக இத்துறை கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இந்தச் சூழலில், மத்திய அரசு அடுத்த 3 முதல் 4 மாதங்களுக்கு “வரி விடுமுறை” (Tax Holiday) அறிவிக்க வேண்டும். அதாவது, இந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வரியை வசூலிக்காமல் இருந்தால், அந்தப் பணத்தைக் கொண்டு இத்துறை தங்களைச் சமாளித்துக் கொள்ளும்.

வரி விடுமுறை அளித்தால் “வருவாய் இழப்பு” ஏற்படும் என்று அரசு கூறலாம். ஆனால், முட்டையிடும் கோழியை (MSME) ஒழுங்காகப் பார்த்துக் கொண்டால்தான் தொடர்ந்து முட்டை கிடைக்கும். இத்துறை அழிந்துவிட்டால் வருவாய்க்கே வழியில்லாமல் போய்விடும். ஏற்கனவே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை வரிச் சலுகை (Corporate Tax Cut) அளிக்கப்பட்டும், அதனால் தனியார் முதலீடு பெரிதாக அதிகரிக்கவில்லை; மாறாகப் பணவீக்கம்தான் அதிகரித்தது.
