சென்னை: ஏஐ குறித்து ஐநா அமைத்துள்ள சர்வதேச அறிவியல் குழுவில் சென்னை ஐஐடியில் பணியாற்றும் பேராசிரியர் ரவீந்திரன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு குறித்து சுதந்திரமாக செயல்படும் சர்வதேச அறிவியல் குழு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை அமைத்து உள்ளது. சர்வதேச அளவில், ஏஐ காரணமாக ஏற்படும் சமூக மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட முதல் சர்வதேச அறிவில் குழு இதுவாகும்.
ஐநா., பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் 40 பேர் இடம்பெற்றுள்ளனர். உலகளாவிய அறிவியல் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், சுதந்திரமான, ஆதாரங்கள் அடிப்படையிலான ஆய்வுகளை ஏஐ நிர்வாகத்தை வடிவமைக்கவும், பல்வேறு பிராந்தியங்கள் மற்றும் துறைகளை சேர்ந்த நிபுணர்கள் இந்தக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுவில் சென்னை ஐஐடி பேராசிரியர் ரவீந்திரனும் இடம்பெற்றுள்ளார்.
இவர் ஐஐடியில் உள்ள டேடா அறிவியல் மற்றும் ஏஐக்கான வாத்வானி பள்ளி துறை ததலைவராக உள்ளார். சென்னை ஐஐடியில் ஏஐ தொடர்பான ஆராய்ச்சிக்கான ஆய்வகமான CeRAI ஐ தோற்றுவித்தவரும் இவர், ஏஐ குறித்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்து வருகிறார்.
இவரது நியமனமானது, ஏஐ துறையில் சர்வதேச அளவில் வளர்ந்து வரும் இந்தியாவின் ஆதிக்கத்தை காட்டுவதாக சென்னை ஐஐடி பெருமிதம் தெரிவித்துள்ளது.
