"ஏன் எப்போதும் அடிவாங்கும் வேடம்?"… செந்தில் கூறிய வார்த்தையை நினைவுகூர்ந்த மகன்

சென்னை,

தமிழ் சினிமாவின் 80 மற்றும் 90-களில் முன்னணி நகைச்சுவை நடிகராக ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்தவர் நடிகர் செந்தில். குறிப்பாக கவுண்டமணியுடன் இணைந்து நடித்த அவரது நகைச்சுவைக் காட்சிகள் இன்று வரை ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகின்றன. இருவரும் இணைந்து நடித்த பல திரைப்படங்கள் வெற்றி பெற்றதுடன், அந்த கூட்டணி தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவை ஜோடிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

குடும்ப வாழ்க்கை

நடிகர் செந்தில், கடந்த 1984-ம் ஆண்டு கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மணிகண்ட பிரபு மற்றும் ஹேமச்சந்திர பிரபு என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் மணிகண்ட பிரபு மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

“ஏன் எப்போதும் அடிவாங்கும் கதாபாத்திரம்?”

சமீபத்தில் தனது தந்தை குறித்து மனம் திறந்து பேசிய மணிகண்ட பிரபு, சிறுவயதில் தங்களுக்குள் எழுந்த ஒரு கேள்வியை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், “நாங்கள் சிறுவயதில் அப்பாவிடம், ‘ஏன் எப்போதும் அடிவாங்கும் கதாபாத்திரத்திலேயே நடிக்கிறீர்கள்? ஒரு முறையாவது திருப்பி அடிக்கும் காட்சிகளில் நடிக்கலாமே?’ என்று கேட்போம். அதற்கு, ‘இயக்குநர்களின் கற்பனையை மாற்றச் சொல்ல முடியாதுப்பா…’ என்று அப்பா பதில் சொல்வார்” என்றார்.

“எங்கள் குடும்பத்துக்காக அந்த தியாகம்”

தொடர்ந்து பேசிய அவர், “அப்போது அந்த பதிலின் அர்த்தம் எங்களுக்கு புரியவில்லை. ஆனால் இன்று திரும்பிப் பார்க்கும்போதுதான், எங்கள் குடும்பத்தின் நலனுக்காகவே அப்பா அந்தக் கஷ்டமான கதாபாத்திரங்களையும் எந்த தயக்கமும் இல்லாமல் ஏற்று நடித்துள்ளார் என்பது புரிகிறது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Source link