பாட்னா; பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் மகன் நிஷாந்த் குமார் அதிகாரப்பூர்வமாக இன்று ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்து கொண்டார். விரைவில் அவர் துணை முதல்வராக பதவி ஏற்பார் என்று தெரிகிறது.
பீஹார் முதல்வராக பதவியேற்ற 4 மாதங்களில் தமது ராஜினாமா அறிவிப்பை நிதிஷ் குமார் வெளியிட்டு உள்ளார். ராஜ்ய சபா எம்பியாக தேசிய அரசியலில் காலடி எடுத்து வைக்க உள்ளதாகவும் அவர் அறிவித்துவிட்டார். அதற்கான வேட்பு மனுவையும் அவர் தாக்கல் செய்து இருக்கிறார். வெகு விரைவில் நிதிஷ் குமாரின் ராஜினாமா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
இந் நிலையில், நிதிஷ் குமார் மகன் நிஷாந்த் குமார் முறையாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் தம்மை இன்று இணைத்துக் கொண்டு இருக்கிறார். பாட்னாவில் உள்ள கட்சி அலுவலகத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் முன்னிலையில் அவர் தம்மை இணைத்துக் கொண்டுள்ளார்.
நிதிஷ் விலகலுக்கு பின்னர், நிஷாந்த் குமாருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது. இதுதொடர்பாக ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டுவிட்டதாக நிதிஷ்குமார் ஆதரவாளர்கள் கூறி உள்ளனர்.
