ஐக்கிய ஜனதா தளத்தில் சேர்ந்தார் நிதிஷ் குமார் மகன்

பாட்னா: பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார், நேற்று முறைப்படி ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தார்.

பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில அரசியலில் திடீர் திருப்பமாக, முதல்வர் நிதிஷ் குமார், 75, சமீபத்தில், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ராஜ்யசபா எம்.பி., ஆனதும், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய அவர் முடிவு செய்துள்ளார். அதே சமயம், தன் மகன் நிஷாந்த்தை துணை முதல்வராக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

இதை உறுதிப்படுத்தும் விதமாக, பாட்னாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார், முறைப்படி ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தார்.

இது குறித்து நிஷாந்த் கூறுகையில், ”கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவேன். ராஜ்யசபா எம்.பி.,யாக என் தந்தை முடிவெடுத்தது, அவரது தனிப்பட்ட விருப்பம்,” என்றார்.

வாரிசு அரசியலுக்கு எதிரா க பேசி வந்த நிதிஷ் குமார், தன் மகனை கட்சியில் இணைத்துள்ளது, பீஹார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நிஷாந்த் பின்னணி

நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார், பொறியியல் பட்டதாரி. தந்தை பெரிய அரசியல் தலைவராக இருந்தாலும், இதுவரை கட்சியில் செல்வாக்கு செலுத்தியதில்லை. அரசியலில் இருந்து விலகியே இருந்தார்.

மவுனம் கலைத்த முதல்வர்

ராஜ்யசபா தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தது குறித்து, முதல்வர் நிதிஷ் குமார் கூறியதாவது:

எம்.எல்.ஏ., – எம்.எல்.சி.,யாக பதவி வகித்து விட்டேன். லோக்சபா எம்.பி.,யாகவும் இருந்துள்ளேன். ராஜ்யசபா எம்.பி.,யாக மட்டுமே இருந்தது இல்லை. எனவே, அந்த பதவியிலும் அமர்ந்து விடலாம் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

‘ராஜ்யசபா எம்.பி.,யாவதற்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக நிதிஷ் குமார் கூறியிருப்பது சிறுபிள்ளைத்தனமானது’ என, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் ராஜ்யசபா எம்.பி., மனோஜ் குமார் ஜா விமர்சித்துள்ளார்.

Source link