தமிழகம், கேரளா, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட நான்கு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், கடந்த சில மாதங்களாகவே, சட்டசபை தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வந்தன.
இந்நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 23, அசாம், கேரளா மற்றும் புதுச்சேரியில், ஏப்ரல், 9ம் தேதியன்று ஒரே கட்டமாகவும், மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல், 23 மற்றும் 29ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும் ஓட்டுப்பதிவு நடைபெறும் என, கடந்த வாரம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்தத் தேர்தலில் பதிவான ஓட்டுகள், மே, 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் நடைபெற உள்ள நான்கு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், தமிழகம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில், கொள்கை ரீதியாக மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ., கட்சியை எதிர்க்கக்கூடிய, தி.மு.க., – கம்யூனிஸ்ட் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிகளே ஆட்சியில் உள்ளன. அதனால், இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழகத்தில் ஆட்சியில் உள்ள தி.மு.க., பலமான கூட்டணி அமைத்துள்ளதால், மீண்டும் வெற்றி உறுதி என, நம்புகிறது. அதேநேரத்தில், பா.ஜ., உடன் கூட்டணி அமைத்துள்ள எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வானது, தி.மு.க., அரசின் மீது மக்களுக்கு உள்ள அதிருப்தி, தங்களது வெற்றிக்கு உதவும் என எதிர்பார்க்கிறது.
அதேநேரத்தில், இந்த தேர்தலில் புதிதாக களமிறங்கியுள்ள நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், தற்போதைய நிலவரப்படி, தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளதால், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் ஓட்டுகளை பிரிக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், எந்தக் கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படும் என்பது தேர்தல் முடிவுகளில் தான் தெரியும்.
அண்டை மாநிலமான கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி அணி, தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியில் இருப்பதால், அரசுக்கு எதிராக அதிருப்தி அலை உருவாகி இருப்பதாகவும், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு வெற்றி வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனாலும், காங்., கூட்டணியில் ஒழுங்கின்மை, கோஷ்டி பூசல்கள் மற்றும் தேர்தல் பிரசார உத்தியில் இடைவெளிகள் என, சில குறைபாடுகள் உள்ளதால், அவற்றை எல்லாம் சாதுர்யமாக கையாண்டால் மட்டுமே, அந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும்.
மேற்கு வங்கத்தில் படிப்படியாக தன் செல்வாக்கை அதிகரித்து வந்துள்ள பா.ஜ., தற்போது பலமான எதிர்க்கட்சியாக உள்ளது. அதனால், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரசை வீழ்த்தி விட்டு, அந்த மாநிலத்தில் வெற்றிக்கொடி நாட்ட வேண்டும் என்பதில், பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது.
அதே நேரத்தில், இந்த மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட, எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி வாயிலாக, 60 லட்சம் வாக்காளர்களின் ஓட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால், எரிச்சல் அடைந்துள்ள முதல்வர் மம்தா, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதுடன், தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக, அக்கட்சி சார்பில், பார்லிமென்டில் கண்டன தீர்மானம் கொண்டு வரவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஆனால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமானது, சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து நீக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த ஐந்து மாநில தேர்தலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகே நடைபெறுகின்றன. அதனால், சிறப்பு திருத்தத்தின் தாக்கம் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கலாம் என, நம்பப்படுகிறது. அந்த முடிவுகள் தற்போதைய ஆளும் கட்சிகளுக்கு சாதகமாகுமா அல்லது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாகுமா என்பது மே, 4ம் தேதிக்கு பிறகே தெரியவரும்.
