ஐபோனுக்கு பதிலாக வந்த தாடி எண்ணெய்: ஆன்லைன் வர்த்தக நிறுவனத்திற்கு ரூ. 2 லட்சம் அபராதம்!

மும்பை

மும்பையில் நபர் ஒருவருக்கு ஆர்டரில் ஐபோனுக்கு பதிலாக எண்ணெய் அனுப்பிய ஆன்லைன் நிறுவனத்திற்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மும்பை போவாய் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், கடந்த ஏப்ரல் 22, 2023 அன்று பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் மூலம் ரூ.1,11,793 மதிப்பில் ‘ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ’ போனை ஆர்டர் செய்தார். இதையடுத்து அவருக்கு வந்த பார்சலைத் திறந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். அதில் ஐபோனுக்குப் பதிலாக, தாடி வளர்க்கும் எண்ணெய் பாட்டில் மற்றும் சில பேக்கிங் பொருட்கள் மட்டுமே இருந்தன.

கோர்ட்டில் வழக்கு

இது குறித்து அந்த நபர் பிளிப்கார்ட் நிறுவனத்திடம் புகார் அளித்தும் முறையான தீர்வு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், மும்பை நுகர்வோர் குறைதீர்ப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட், அவருக்கு தவறான பொருளை அனுப்பியது பிளிப்கார்ட் மற்றும் அதன் விற்பனையாளரின் சேவை குறைபாடுதான் என்பதை உறுதி செய்தது.

கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபருக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நுகர்வோர் நீதிமன்ற உத்தரவுகள் பின்வருமாறு:-

ஐபோனின் அசல் தொகையான ரூ. 1,11,793-ஐ, ஆர்டர் செய்த தேதியில் (ஏப்ரல் 22, 2023) இருந்து 9% ஆண்டு வட்டியுடன் திருப்பித் தர வேண்டும். வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட கடுமையான மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 50,000 வழங்க வேண்டும். மேலும் இந்த வழக்கிற்கான செலவுத் தொகையாக ரூ. 20,000 வழங்க வேண்டும் என அதிரடி தீர்ப்பு வழங்கியது.

ஆப்பிள் நிறுவனம் விடுவிப்பு

இந்த டெலிவரி குளறுபடிக்கும் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் இந்தியாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே ஆப்பிள் நிறுவனம் மீதான புகார் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த மொத்த தொகையையும் 45 நாட்களுக்குள் பிளிப்கார்ட் மற்றும் அதன் விற்பனையாளர்கள் இணைந்து அந்த நபருக்கு வழங்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் மோசடிகளால் பாதிக்கப்படும் நுகர்வோருக்கு இந்த தீர்ப்பு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.

Source link