"ஒரு கட்சி தலைவருக்கு நாலு விஷயங்கள் தெரிய வேண்டாமா?" – விஜய்க்கு எடப்பாடி பதிலடி!

தவெக தலைவர் விஜய்யின் விமர்சனத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்திருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி

கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதற்கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருந்தார்.

குறிப்பாக திமுக ஆட்சியில் மாதந்தோறும் 1000 ரூபாயாக வழங்கப்படும் உதவித்தொகை அதிமுக ஆட்சிக்கு வந்தால் 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதுமட்டுமின்றி பெண்களுக்கு மட்டும் அல்லாமல் ஆண்களுக்கும் இலவச பேருந்து வசதி ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இரண்டாம் கட்ட வாக்குறுதி

இந்நிலையில் இரண்டாம் கட்டமாக தேர்தல் வாக்குறுதிகளை இன்று (பிப்.4) எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

*சிறுபான்மையினர் மகளிருக்கு வட்டி இல்லாக் கடன்

* ஜல்லிக்கட்டு நடத்த 5 லட்சம் மானியம்

* மாற்றுதிறனாளிகளின் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி

* முதியோருக்கான ஓய்வூதியம் ரூ. 2000

* ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் இலவசம்

* மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும்

போன்ற வாக்குறுதிகளை அறிவித்திருக்கிறார்.

விஜய்க்கு ஒன்றுமே தெரியவில்லை!

இதனைத்தொடர்ந்து அதிமுகவை விஜய் விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், ” ஒரு சம்பவம் (கரூர்) நடந்து 72 நாட்கள் கழித்து தான் அவர் வெளியில் வந்தார்.

வெளியே வந்தால் தான் விஜய்க்கு விஷயம் தெரியும். விஜய்க்கு ஒன்றுமே தெரியவில்லை.

ஒரு கூட்டணி கட்சிக்கு யார் தலைமை தாங்குகிறார்கள் என்று கூட அவருக்கு தெரியவில்லை.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுக தலைமைத் தாங்கும் என்று ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டார்கள்.

ஒரு கட்சி தலைவருக்கு நாலு விஷயங்கள் தெரிய வேண்டாமா?. ஒரு முறையாவது முதலில் செய்தியாளர்களைச் சந்தித்து அவரை பேச சொல்லுங்கள்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

யாரை குறிப்பிடுகிறார்?

ஊழல் சக்தி என்று அவர் யாரை குறிப்பிடுகிறார். எங்களை எல்லாம் ஊழல் என்று சொல்லவே முடியாது.

அதிமுக ஆட்சியில் என்னை ஊழல்வாதி என்று குற்றம்சாட்டி இருந்தார்கள். ஆனால் நான் நிரபராதி என்று நீதிப்பெற்று வெளியில் வந்திருக்கிறேன்.

அதிமுகவில் இருந்து வெளியேறிய ஒருத்தர் தவெகவில் இணைந்திருக்கிறார். அவர் ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் இருந்து வெளியே வந்தவர் தான். அப்போது விஜய் யாரைக் குறிப்பிடுகிறார்.

எங்களைக் குறிப்பிட்டு சொன்னால் அதற்கான பதிலை தெளிவாகச் சொல்லுவோம்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

Source link