ஒரே இடத்தில் பணிபுரிவோரை மாற்றுக: அ.தி.மு.க., முறையீடு

சென்னை: சட்டசபை தேர்தல் தொடர்பாக, தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்ற, அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம், நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடந்தது.

கூட்டம் முடிந்த பின், அரசியல் கட்சி பிரதிநிதிகள் அளித்த பேட்டி:

தி.மு.க.,- ஆர்.எஸ்.பாரதி:

சட்டசபை தேர்தலையொட்டி, தலைவர்களின் சிலைகளை மூட, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளதாக சொல்கின்றனர்.

அதன்படி எம்.ஜி.ஆர்., சிலை மூடப்படுவதை, ‘டிவி’யில் பார்த்தேன். ‘உயிரோடு இல்லாத தலைவர்களின் சிலையை மூட வேண்டிய அவசியம் இல்லை’ என, உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. அதன்படி, தேர்தல் கமிஷன் செயல்பட வேண்டும்.

அ.தி.மு.க.,- ஜெயகுமார் மற்றும் இன்பதுரை:

ஆளும்கட்சிக்கு ஆதரவான அதிகாரிகள், பறக்கும் படையில் இடம் பெறுகின்றனர். இவர்கள் முன்கூட்டியே ஆளும் கட்சியினருக்கு, ‘ரெய்டு’ தொடர்பான தகவல்களை அளித்து விடுகின்றனர். எனவே, மத்திய அரசு அதிகாரிகளை, பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

மூன்று ஆண்டுகளுக்கு மேல், ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை, இடமாற்றம் செய்யவேண்டும்.

காங்கிரஸ் – தங்கபாலு:

வேட்பாளருக்கு, பிரசாரம் செய்வது, கட்சியினரை சந்திப்பது என, பல பணிகள் உள்ளன.

எனவே, வேட்பாளர்களின் ஏஜண்டுகள், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அதிகாரிகளை சந்தித்து, கணக்கு சொன்னால் போதும் என்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும்.

பா.ஜ.,- கராத்தே தியாகராஜன்:

பறக்கும் படை கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளை, ‘வீடியோ’ பதிவு செய்ய, அரசியல் தொடர்புடைய நிறுவனத்தை நியமித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனால், முறைகேடு நடப்பதற்கு வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Source link