'ஒரே நாடு; ஒரே தேர்தல்' கொள்கை வலுவான முடிவுகளை எடுக்க உதவும் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு

புதுடில்லி: ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்ற கொள்கையை செயல்படுத்துவதன் மூலம், அரசு நிர்வாகங்கள் வலுவான முடிவுகளை எடுக்கவும் நீண்டகால கொள்கையில் கவனம் செலுத்துவும் உதவும் என, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

டில்லி பாரத் மண்டபத்தில் ஆங்கில நாளிதழான, ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ குழுமத்தால், சி.எஸ்.ஆர்., எனப்படும் சமூக பொறுப்பு நிதிக்கான தேசிய மாநாடு நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பங்கேற்று பேசியதாவது:

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்படும்போது, ஒட்டுமொத்த சமூகமும் முன்னேறுகின்றன.

உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக முன்னேறியுள்ள நிலையில், இந்த மாற்றத்தை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது. உள்கட்டமைப்பு சீர்த்திருத்தங்கள், டிஜிட்டல் இணைப்பு, நிதி உள்ளடக்கம் உள்ளிட்டவை 25 கோடிக்கும் மேற்பட்ட மக்களை, தீவிர வறுமையில் இருந்து மீட்டெடுத்துள்ளன.

சமூக பொறுப்பு நிதி என்பது, நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக அமையும். 2047ல் வளர்ந்த பாரதம் என்ற தொலைநோக்கு பார்வை மற்றும் சுயசார்பு இந்தியா உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு நம் வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

கல்வியின் தரத்தை வலுப்படுத்துவது, தொலைதுாரப் பகுதிகளில் சுகாதார சேவையை மேம்படுத்துவது, தொழில்துறை மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்டவற்றிற்கு ஆதரவளிப்பது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் காலநிலை மாற்றத்தை மேம்படுத்துவதிலும் சமூக பொறுப்பு நிதி முக்கிய பங்கு வகிக்கும்.

வணிகத்தை எளிதாக்குதல், டிஜிட்டல் நிர்வாகம், ஜி.எஸ்.டி., போன்ற கொள்கை சீர்த்திருத்தங்கள் மூலம், அரசு நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையும் வெளிப்படைத்தன்மையும் வலுப்பெற்றுள்ளன. எனினும், கொள்கை அளவில் மட்டுமே ஒரு நாட்டை மாற்ற முடியாது. ஒட்டுமொத்த மக்களும் பொறுப்புடன் பங்கேற்பதை உறுதிசெய்வதில், தேர்தல் செயல்முறைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்ற கொள்கையை செயல்படுத்துவதன் மூலம், அரசு நிர்வாகங்கள் வலுவான முடிவுகளை எடுக்கவும் நீண்டகால கொள்கையில் கவனம் செலுத்தவும் உதவும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Source link