ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ரூ.500 கோடி ஊழல்: அன்புமணி புகார்

சென்னை: ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில், 500 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றச்சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழக அரசின் வேளாண் விற்பனைத் துறையில், 27 மாவட்ட விற்பனைக் குழுக்கள், அதன் கட்டுப்பாட்டில், 284 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், 13 துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

விவசாயிகளின் விளைபொருட்களை மறைமுக ஏலத்தில் விற்பனை செய்து, அவர்களுக்கு அதிக விலை பெற்றுத் தருவது தான், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் பணி. இதற்காக, வணிகர்களிடம் இருந்து, அவர்கள் வாங்கும் பொருட்களின் மொத்த மதிப்பில், 1 சதவீதம் சந்தை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இவ்வாறு வசூலிக்கப்பட்ட தொகையில் தான் பெருமளவில் ஊழல்கள் நடந்துள்ளன. வணிகர்களுடன் ஊழல் கூட்டணி அமைத்து, விவசாயிகளுக்கு குறைவான கொள்முதல் விலையை பெற்றுத் தருகின்றனர்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கிடைக்கும் வருவாயை, அவற்றின் மேம்பாடு, பராமரிப்புக்காக பயன்படுத்திக் கொள்ள முடியும். 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவான தொகையை விற்பனைக் குழுக்களே செலவழித்துக் கொள்ளலாம் எனற அரசாணை உள்ளது.

இது தான் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ஊழல் நடப்பதற்கான ஊற்றுக்கண்ணாக திகழ்கிறது. இந்த அரசாணையை பயன்படுத்தி, ஒவ்வொரு விற்பனைக் குழுவிலும் உள்ள தொகையை, 5 லட்சம் ரூபாய்; 5 லட்சம் ரூபாயாக பிரித்து, அதை பல்வேறு பணிகளுக்கு செலவு செய்ததாக சுருட்டிக் கொள் கின்றனர்.

இந்த ஊழல் தொகையை, சம்பந்தப்பட்ட அனைவரும் பகிர்ந்து கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தமிழகம் முழுதும் நான்காண்டுகளில், 500 கோடி ரூ பாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்த, தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link