ஓசூர்: ”டி.வி.எஸ்., நிறுவனம் தான் எனக்கு ‘சீட்’ வாங்கி கொடுத்தது,” என, ஊத்தங்கரை காங்கிரஸ் வேட்பாளர் குப்புசாமி பேசியது, சர்ச்சையாக வெடித்துள்ளது.
ஓசூர் டி.வி.எஸ்., தொழிற்சங்க தலைவரான குப்புசாமி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதியில் காங்., சார்பில் போட்டியிடுகிறார்.இவர், ஐ.என்.டி.யூ.சி., தொழிற்சங்க கூட்டத்தில் பேசியதாவது:
தமிழக காங்.,கில் மட்டும் 250 தலைவர்கள் உள்ளனர். அவர்களை மீறி, என் பக்கம் ஒரு ‘சீட்’ விழ வேண்டு மெனில், சுனாமி புயல் அடிச்சால் தான் நடக்கும்.
28 ‘சீட்’களில், 15 ‘சீட்’களை எம்.எல்.ஏ.,க்களுக்கே கொடுக்க வேண்டுமென சொல்லிவிட்டனர்; மீதம் உள்ளதை வாரிசுகளுக்கு கொஞ்சம் கொடுத்தாங்க. சத்தியமா என்கிட்ட பைசா இல்லை.
டி.வி.எஸ்., நிறுவனம் தான் எனக்கு ‘சீட்’ வாங்கி கொடுத்தது; அதுவே கடைசி வரைக்கும் துாக்கி பிடிக்காது.
இப்படியாக அவர் பேசியதை, தேர்தல் பறக்கும் படையினர் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தனர். அதை கூட அறியாத வேட்பாளர் குப்புசாமி, ”இன்று காலையில் தான், 50 லட்சம் ரூபாய் திரட்டி கிருஷ்ணகிரிக்கு அனுப்பினேன்,” என்றார்.
இப்படி அவர் பேசியது சர்ச்சையாகி உள்ளது.
