நமது சிறப்பு நிருபர்
ஓடும் லாரியிலிருந்து தப்பித்த ஏழு நாய்கள் தங்கள் உரிமையாளர்களிடம் திரும்ப வந்து இணைவதற்காக, சீனாவில் 17 கி.மீ., தூரம் ஒன்றாக பயணித்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
சீனாவின் ஜிலின் மாகாணத்தின் சாங்சுன் நகரில் உள்ள ஒரு பரபரப்பான நெடுஞ்சாலையில் ஓடும் லாரியிலிருந்து தப்பித்த ஏழு வெவ்வேறு இனங்களை சார்ந்த நாய்கள் கூட்டமாக நடந்து செல்லும் வீடியோ பேசும் பொருளாகியது. நாய் இறைச்சிக் கடை ஒன்றில் வேலை பார்க்கும் திருடர்கள் நாயை கடத்தி ஒரு லாரியில் அடைத்து கொண்டு சென்றுள்ளனர். அப்போது தான் ஏழு நாய்களும் லாரியில் இருந்து தப்பித்துள்ளன.
இரண்டு நாட்களில் 17 கி.மீ தூரம் பயணித்த அந்த நாய்கள் மீண்டும் தங்கள் உரிமையாளர்களிடம் வந்து சேர்ந்துள்ளன. சாலையில் வரும்போது அந்த நாய்களை கோர்கி (Corgi) நாய் வழி நடத்தியது, வீடியோக்களின் மூலம் தெரியவந்துள்ளது. வரும் வழியில் காயமடைந்த ஜெர்மன் ஷெப்பர்டைப் பாதுகாப்பாக நாய்கள் சேர்ந்து நடத்தி கொண்டு வந்த அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன. இந்த நாய்கள் குழுவில் காயம் அடைந்த ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட், ஒரு கோர்கி, கோல்டன் ரெட்ரீவர்ஸ், லாப்ரடார்ஸ் மற்றும் பெக்கினீஸ் நாய்கள் ஆகியவை இருந்தன. இந்த சம்பவம், ஆபத்து நேரத்தில் விலங்குகள் தங்களுக்குள் பேணும் ஒற்றுமை மற்றும் புத்திசாலித்தனத்திற்குச் சிறந்த உதாரணமாக அமைந்திருந்தது.
இந்த நாய்கள் கூட்டத்தை பார்த்த சமூக வலைதள பயனர் ஒருவர் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: அவை ஆபத்தில் சிக்கிய சிறு சகோதரர்கள் கூட்டத்தை போல ஒற்றுமையாக சாலையில் வலம் வந்தன. நான் அந்த நாய்களுக்கு பலமுறை உதவ முயன்றேன். அவற்றை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்ல முயன்றேன். ஆனால் அதையெல்லாம் புறக்கணித்துவிட்டு ஒற்றுமையாக சாலைகளில் புத்திசாலிதனமாக நாய்கள் ஒற்றுமையாக செயல்பட்டன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
