ஓட்டளிக்க குடியுரிமை கட்டாயம்: அமெரிக்க அதிபரின் அடுத்த ஆட்டம்

வாஷிங்டன்: தேர்தல்களில் ஓட்டுகள் திருடப்படுவதை தடுக்கும் வகையில், இனி குடியுரிமை ஆதாரத்தை காட்டுவது கட்டாயம் என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

கடந்தாண்டு ஜனவரியில், அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றார் குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப். பதவியேற்றதில் இருந்து குடியேற்ற விதிகளில் கடும் நிபந்தனைகள், கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார்.

இதைத் தொடர்ந்து, வர்த்தகம் தொடர்பாக, இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகளுக்கு அதிக வரிகளை விதித்து மிரட்டல் விடுத்தார்.

அடுத்ததாக, தேர்தல் நடைமுறைகளில் சீர்திருத்தம் தேவை என்று டிரம்ப் நேற்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:

அமெரிக்காவில் தேர்தல் சீர்த்திருத்தங்கள் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.

தேர்தலில் ஓட்டளிப்பதில் பல மோசடிகள் நடக்கின்றன; ஓட்டுகள் திருடப்பட்டுள்ளன. அவற்றை நாம் சரி செய்ய போகிறோம். தேர்தல் சீர்திருத்தங்கள், கடுமையான கட்டுப்பாடுகள் தேவை.

குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களைத் தவிர வாக்காளர்கள் ஓட்டளிக்க அமெரிக்க குடியுரிமைக்கான ஆதாரத்தை கட்டாயம் காட்ட வேண்டும். அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் அடையாள அட்டையை காட்ட வேண்டும்.

இ – மெயில் மூலம் இனி ஓட்டளிக்க முடியாது. நோய்களால் பாதிக்கப்பட்டோர், ராணுவத்தினர் தவிர மற்ற யாரும் தபால் வாக்கு சீட்டு முறையில் ஓட்டளிக்க கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source link