தே ர்தல் காலத்தில், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
திண்டுக்கல், ஈ.பி., காலனியைச் சேர்ந்தவர் முருகன், 47. கடந்த 30 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறார். தன் ஆட்டோவின் பின்பகுதியில், ‘கல்வி, மருத்துவம் தவிர இலவசம் வேண்டாம்; வேலைவாய்ப்பு தான் வேண்டும். நல்லாட்சி மலர ஓட்டுகளை விற்க வேண்டாம்’ என அச்சடிக்கப்பட்ட பிளக்ஸ் பேனரை கட்டி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
கேரள முதல்வர் பினராயி விஜயன், முதல் வகுப்பு தொடங்கி உயர் கல்வி வரை இலவசம் என அறிவித்து செயல்படுத்தி விட்டார். நம் வாக்காளர்களிடம் எதை இலவசமாக பெற வேண்டும் என்பதில் பெரிய குழப்பம் உள்ளது. இங்கு, ‘வசதியானவர்களுக்கு கூட உரிமை தொகை கிடைத்துவிட்டது. எங்களுக்கு கிடைக்கவில்லை’ என, நுாதன லஞ்சம் பெற சண்டையிடும் மனோபாவம் தான் உள்ளது. கட்சிகளின் இலவச அறிவிப்புகள், பல தலைமுறை சந்ததியினரின் சுயசார்பு வாழ்க்கையை மண்ணோடு மண்ணாக புதைத்துவிட்டது. அதனால்தான், விழிப்புணர்வு வாசகங்களுடன் ஒரு பிளக்ஸ் பேனர் அச்சடித்து, வாடிக்கையாளர்களிடமும் எனக்கு தெரிந்தவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
