ஓ மலுார் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் மணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய நடிகை விந்தியா வந்தபோது, கூட்டம் இல்லை. இதனால், அவர் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு திரும்பினார்.
சேலம் மாவட்டம் ஓமலுார் தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளராக, ‘சிட்டிங்’ எம்.எல்.ஏ., மணி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து, நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு, காடையாம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, நடிகை விந்தியா பிரசாரம் செய்வதாக கூறி, கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் அழைக்கப்பட்டனர். விந்தியா, பிரசார வேனில் 4:45 மணிக்கு அங்கு வந்தார். வேட்பாளர் மணி இல்லை. கூட்டமும் இல்லாததால், ‘டென்ஷன்’ ஆன விந்தியா, அவரது பவுன்சர்களோடு காரில் காத்திருந்தார். 5:00 மணிக்கு அங்கு வந்த வேட்பாளர் மணி, விந்தியாவுக்கு சால்வை அணிவித்தார்.
தொடர்ந்து விந்தியா, ‘இங்கு 100 பேர் மட்டும் உள்ளனர். இப்படி குறைந்த கூட்டத்தில் எல்லாம் பேச வேண்டாம் என, பழனிசாமி கூறியுள்ளார். அடுத்த பாயின்டில், இதைவிட அதிகம் பேர் காத்திருக்கின்றனர். அங்கு போகாமல் இங்கு வந்துள்ளேன்’ என கூறி, பிரசாரத்தை ரத்து செய்து விட்டு, கேரவனில் ஏறி திரும்பி சென்றார். இதனால், கட்சியினர் தர்மசங்கடத்துக்கு ஆளாகினர்.
கடுப்பான வேட்பாளர், அருகே இருந்த பெட்ரோல் பங்க் உள்ளே சென்று, காடையாம்பட்டி நகரம், ஒன்றிய நிர்வாகிகளை போனில் தொடர்பு கொண்டு, ‘டோஸ்’ விட்டார்.
