சிவகங்கை : “கடந்த தேர்தலில் அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்த பழனிசாமி, இந்த முறை விற்றுவிட்டார்” என துணை முதல்வர் உதயநிதி விமர்சனம் செய்தார்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கேஆர்.பெரியகருப்பனை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பேசியது: “ஐந்து ஆண்டுகள் திராவிட மாடல் ஆட்சியில் சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம். அந்த தைரியத்தில் தான் இந்த முறை வாக்கு கேட்டு வந்துள்ளேன்.
அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய மடிக்கணினி திட்டத்தை 2019-ல் அவர்களே நிறுத்திவிட்டனர். ஆனால் முதல்வர், கல்லூரி மாணவர்களுக்கு தான் பயனுள்ளதாக இருக்கும் என்று, அவர்களுக்கு 10 லட்சம் மடிக்கணிகளை வழங்கினார்.
