கடலுார்: கடலுார் தலைமை தபால் நிலையம் மற்றும் பாஸ்போர்ட் அலுவலக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து நேற்று நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.
கடலுார் தலைமை தபால்நிலைய அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப் பட்டுள்ளதாக, திருச்சி மண்டல அலுவலகத்திற்கு நேற்று இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.
தகவலின் பேரில் நேற்று கடலுார் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் கலைவாணி, மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் தெரிவித்தார்.
அதன்பேரில், வெடிகுண்டு நிபுணர்கள் நேற்று மாலை 3:00 மணிக்கு தலைமை தபால்நிலையம், பாஸ்போர்ட் அலுவலக வளாகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் முடிவில் இதுவும் புரளி எனத்தெரிந்தது. நேற்று முன்தினம், மற்றும் நேற்று என தொடர்ந்து தலைமை தபால் நிலைய அலுவலக வளாகத்திற்கும், கடந்த 17ம் தேதி கடலுார் கோர்ட் வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் இ-மெயில் மூலம் மிரட்டல் வந்தது.
தொடர்ச்சியான வெடிகுண்டு மிரட்டல் புரளியால் அதிகாரிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
