இங்கே ஈசன் ருத்ர அம்சத்தில் இருப்பதால், பக்தர்கள் சுவாமிக்கு நேர் எதிரில் உள்ள வாயில் வழியே நுழையமாட்டார்கள். அம்பாள் சந்நிதி வாயில் வழியாகவே வருவார்கள். அதேபோல் கோயிலுக்கு எதிரில் குடியிருப்புகளோ ஊரோ இருக்காது.
அகஸ்தியர் கால்வாய், பழையாறு, புத்தனாறு, தோவாளை சானல்னு ஆறுகளும் கால்வாய்களும்தான் தொடர்ந்து இருக்கும். ராமபிரான் தாடகையைக் கொன்ற பாவம் நீங்க இத்தல இறைவனை வழிபட்டதாக ஐதிகம்.
அப்படி ராமர் தவம் செய்த இடம் ஆலயத்தின் பின்புறம் இருப்பதாகச் சொல்கிறார்கள். அங்கே பாதுகா மண்டபத்தையும், ராமர் பாதத்தையும் தரிசிக்கலாம்
உள் பிராகாரத்தில் கன்னி விநாயகர், தேவியருடன் அருளும் முருகன், ஆதித்தன், சபாபதி, சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, தர்மசாஸ்தா ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.
மேற்குக் கோபுர வாயில் வழியே நுழைந்தால் நினைத்ததை முடிக்கும் விநாயகரைத் தரிசனம் செய்யலாம். வெளிப் பிராகாரத்திலெயே சாஸ்தாவையும் தரிசிக்கலாம்.

மதுரையை ஆண்ட பூதபாண்டியனின் மகன் பசுபதி பாண்டியன். இவரின் வயிற்றுவலி, இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்ட பிறகு குணமானதாம். ஆகவே, பூதபாண்டியன் இந்தக்கோயிலுக்குப் பல திருப்பணிகள் செய்துள்ளார்.
கோயிலை விரிவுபடுத்தி கட்டியவர், ஓர் ஊரையும் கட்டமைத்தாராம். மதுரையைப் போன்றே எட்டு இதழ் தாமரை வடிவில் அழகிய மணவாள பெருமாள் கோயிலை மையப்படுத்தி நகரை நிர்மாணித்தாராம். ஆகவே ஊருக்குப் பூதப் பாண்டி எனப் பெயர் வந்தது என்று சொல்வார்கள்.
