கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாள் பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள்

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாள் பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.

அதில் தன் புதிய கட்சியின் கொடியை அறிமுகம் செய்து சசிகலா பேசியதாவது:அண்ணாதுரை வழியில் வந்த எம்.ஜி.ஆரை, அப்போதைய முதல்வர் கருணாநிதி அழிக்க நினைத்தார். அதை முறியடித்து எம்.ஜி.ஆர்., முதல்வரானார். அவரது இறப்பிற்கு பின், ஜெ., தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்து, எதிர்க்கட்சி தலைவரானார். பின், அரசியலில் இருந்து விலக முற்பட்டார்; நான் தான், வற்புறுத்தி அரசியலில் இருக்க வைத்தேன்.

அதன்பின், அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராகி முதல்வரானார். ஜெ., மறைவிற்கு பின், என்னை பொதுச்செயலராகவும், முதல்வராகவும் வேண்டும் என அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் வற்புறுத்தினர். முதல்வராக பொறுப்பேற்க முயன்றபோது நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. அப்போது அ.தி.மு.க., அழிந்து விடக்கூடாது என, உடனடியாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களை வரவழைத்துப் பேசி, ஒருவரை முதல்வராக்கினேன்.

பின், ஒன்பது ஆண்டுகள் அமைதியாக இருந்தேன். அ.தி.மு.க., இதுவரை, 10 முறை தோல்வியை கண்டுள்ளது. இப்போது அ.தி.மு.க., அழிந்து வருகிறது. இனியும் அமைதியாக இருக்க கூடாது என்பதால், புதிய கட்சியை துவங்க உள்ளேன்.

எதிரிகள், துரோகிகளின் வேர் அறுக்கும் கட்சியாக புதிய கட்சி செயல்படும். கருப்பு, வெள்ளை, சிவப்பு நடுவே அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படம் உள்ள கட்சிக்கொடியை அறிமுகப்படுத்துகிறேன். கட்சியின் பெயரை விரைவில் அறிவிக்கிறேன். இவ்வாறு பேசினார்.

Source link