கருணாநிதியே ஸ்டாலினை நம்பவில்லை: பிரசாரத்தில் பழனிசாமி கடும் தாக்கு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், அ.தி.மு.க., சார்பில், ‘மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ பிரசார கூட்டம் நேற்று மாலை நடந்தது.

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மகளிர் தினத்தை முன்னிட்டு ரோஸ் நிற பலுான்களை பறக்கவிட்டு, மகளிர் தின வாழ்த்துக்கூறி பேசியதாவது:

இன்னும், எட்டு நாளில் தேர்தல் அறிவிப்பும், அடுத்த மாதம் தேர்தலும் வந்துவிடும். தி.மு.க., பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, ‘அ.தி.மு.க.,வை, பா.ஜ., விழுங்கிவிடும்; அ.தி.மு.க.,வையே அழித்துவிடும்’ என்கிறார். அ.தி.மு.க.,வை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது.

அதே கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், ‘அ.தி.மு.க.,வில் எங்களுக்கு மரியாதை இல்லை’ என குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நேரத்தில் தி.மு.க.,வின் ‘பி’ டீம் என நாங்கள் கூறி வந்த பன்னீர்செல்வம், அ.தி.மு.க.,வுக்கு எதிராக ஓட்டளித்தார்.

தற்போது, தி.மு.க., பக்கம் சென்று, தன்னை ‘பி’ டீம் என நிரூபித்துள்ளார். ‘கெடுவான் கேடு நினைப்பான்; அவனும் கெடுவான்’ என்பதற்கு ஏற்ப பன்னீர்செல்வம், ஸ்டாலினுடன் இணைந்துள்ளார்.

அ.தி.மு.க.,வுக்கு துரோகம் இழைத்ததால், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆன்மாக்கள் அவரை அ.தி.மு.க.,வில் இருந்து விரட்டி அடித்துள்ளன.

அதனால், அ.தி.மு.க., இன்று துாய்மையான இயக்கமாகி உள்ளது. ‘ஆமை புகுந்த வீடு உருப்படாது’ என்பர். அதேபோல பன்னீர்செல்வம் புகுந்த தி.மு.க.,வும் உருப்படாது.

அ.தி.மு.க.,வில் சாதாரண தொண்டனும், முதல்வர் உட்பட எந்த பதவியையும் பெற முடியும். தி.மு.க.,வில் கருணாநிதி குடும்பத்தினர் மட்டுமே கட்சி, ஆட்சி அதிகாரத்தில் பதவிகளை பெற முடியும். கருணாநிதி உயிரோடு இருந்த வரை, ஸ்டாலினை அவர் நம்பவில்லை.

கட்சி தலைமை, முதல்வர் பதவி என எதையும் ஸ்டாலினுக்கு தரவில்லை. செயல் தலைவர், துணை முதல்வர் என்றே பதவிகளை வழங்கினார். கருணாநிதியே நம்பாத ஒரு நபர் தான் ஸ்டாலின். இதை உலகம் அறியும். இவ்வாறு அவர் பேசினார்.



தி.மு.க., போடுவது இரட்டை வேடமே!

கடந்த 2011 முதல் 2021 வரை பல தேர்தல்களில் தி.மு.க., தோற்றுள்ளது. ஆனால், தோல்வியே அடையாத கட்சி போல, முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். ஸ்டாலின் வாயைத் திறந்தாலே பொய் தான் வருகிறது. இதை தமிழக மக்களும் நன்கு அறிவர். தி.மு.க.,வுக்கு வரும் சட்டசபை தேர்தல் தான் இறுதி தேர்தலாக இருக்கும்.
தி.மு.க., எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு. ஆளும்கட்சியாக இருக்கும் போது வேறொரு நிலைப்பாடு. தி.மு.க. எப்போதும் இரட்டை வேடம் தான் போடும். தி.மு.க., ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது. கொள்ளையடித்த பணத்தை வெளிநாடுகளில் தி.மு.க.,வினர் பதுக்கி உள்ளனர்.
– பழனிசாமி, பொதுச்செயலர், அ.தி.மு.க.,

Source link