சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ஜன.12 மற்றும் 19ம் தேதிகளில் நடிகர் விஜய் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி இருந்தார். தற்போது நாளை (மார்ச் 10) மீண்டும் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.
இந் நிலையில் இந்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பி இருக்கும் விவரம் வெளி வந்துள்ளது. இந்த விவரத்தை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது;
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜக்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருக்கிறது. ஆனால் அந்த சம்மன் அவருக்கோ அல்லது அவரது வீட்டுக்கோ, அவரின் அலுவலகத்தின் பிரதிநிதிக்கோ கிடைக்கவில்லை. சம்மன் அவரின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு செந்தில் பாலாஜி எந்த பதிலும் அளிக்கவில்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதே கரூர் வழக்கு விசாரணைக்காக, நடிகர் விஜய் சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளதாகவும் ஏஎன்ஐ செய்தி வெளியிட்டு இருக்கிறது. அதில், விசாரணைக்கு ஆஜராக 15 நாள் அவகாசம் கோரி இருப்பதோடு, சென்னையில் அல்லது அதற்கு அருகில் வேறு எங்கேனும் விசாரணைக்கு ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த இரு கோரிக்கைகளையும் சிபிஐ பரிசீலித்து வருகிறது, ஆனால் எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை, இருப்பினும் சிபிஐ விஜய்க்கு புதிய சம்மன் ஒன்றை அனுப்பும் என்றும் ஏஎன்ஐ கூறி உள்ளது.
