பழநி மலையில் அருளும் முருகப்பெருமான் திருமேனி சித்தர்களால் செய்யப்பட்டது. ஒன்பது வகையான விஷங்களைக் கூட்டிச்செய்யப் பட்ட மாமருந்து அந்தத் திருமேனி என்பார்கள். பால தண்டாயுதபாணியாகத் திகழும் பழநி முருகனை தரிசித்தாலோ வணங்கினாலோ நம் நோய்கள் தீர்த்து அருள்வார் என்பது நம்பிக்கை. அதன் காரணமும் அவர் அருமருந்தின் வடிவாக அருள்வதுதான் என்பது நம்பிக்கை. அப்படிப்பட்ட நவபாஷாண முருகனின் சந்நிதி ஒன்று கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த முருகப்பெருமானை வணங்கி வழிபட்டால் வாழ்வில் சகல செல்வங்களும் கிடைப்பதோடு நோய் தீர்ந்து ஆரோக்கியமும் பெருகும் என்கிறார்கள் பக்தர்கள். வாருங்கள் அந்த அற்புத ஆலயம் குறித்து அறிந்துகொள்வோம்.

கரூர் மாவட்டத்தில் சின்னதாராபுரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு முனிமுக்தீஸ்வரர் ஆலயம். கரூர்- தாராபுரம் மார்க்கத்தில் சுமார் 30 கி.மீ. தூரத்தில் உள்ளது சின்னதாராபுரம். அங்கே இறங்கி, அமராவதி ஆற்றங்கரையை நோக்கி நடந்தால், சிறிது தூரத்திலேயே உள்ள முனிமுக்தீஸ்வரர் ஆலயத்தை அடையலாம்.
தமிழகத்தில் உள்ள மேற்குநோக்கிய சிவாலயங்களில் இது மிகவும் முக்கியமானது. சுமார் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் அம்பாள் அகிலாண்டேஸ்வரியுடன் கோயில் கொண்டிருக்கிறார் ஈசன். மேற்கு நோக்கி அருளும் இந்த இறைவனை வணங்கினால், முக்தி கிடைக்கும் என்பதால் இவருக்கு முனிமுக்தீஸ்வரர் என்று திருப்பெயர் உண்டானது.
